கொள்ளையடித்த நகை, பணத்தில் கடவுளுக்கும் திருடர்கள் பங்கு கொடுத்த விவகாரம் பெங்களூரு போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சாம்ராஜ்பேட்டை அப்புராவ் சாலையில் வசித்து வந்தவர் உமா. கடந்த 29-ம் தேதி உமா குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தார். அதன் பின் அடுத்த நாள் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டுக் கிடந்தது. இதனால் உமா குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் வீட்டில் இருந்த ரூ.6 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து எப்படி பீரோவை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர் என்பது தெரியாமல், உமா குடும்பத்தினர் குழப்பமடைந்தனர்.
இது தொடர்பாக பெங்களூரு ஒயிட்பீல்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து உமா வீட்டில் கைரேகைகளைப் பதிவு செய்தனர்.
அப்போது அந்த கைரேகைகள் பிரபல கொள்ளையர்களான கிரண், ஆனந்த், நானி ஆகியோரின் கைரேகைகளுடன் ஒத்துப்போனது. பூட்டிய வீட்டில் போலி சாவி கொண்டு திறந்து நகை, பணத்தை கொள்ளையடிப்பதில் இவர்கள் மூவரும் வல்லவர்கள். எனவே, உமா வீட்டில் இவர்கள் கொள்ளையடித்திருக்கலாம் என போலீஸார் சந்தேகப்பட்டனர்.
இதுகுறித்து விசாரித்த போது,உமா வீட்டின் அருகில் தான் கிரண் வசித்து வந்தது தெரிய வந்தது. எனவே, உமா வீட்டில் கொள்ளையடித்தது அவர்கள் தான் என்பதை போலீஸார் உறுதி செய்தனர்.
இதையறிந்த கிரண் உள்ளிட்ட மூவரையும் போலீஸார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் மூவரும் இன்று போலீஸாரிடம் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உமா வீட்டில் அவர்கள் தான் கொள்ளையடித்தது தெரிய வந்தது. மேலும், தாங்கள் கொள்ளையடிக்கும் பணத்தில் நான்கு பங்குகளாக பிரித்து ஒரு பங்கை மாதேசுவரன் கோயில் உண்டியலில் போட்டு விடுவோம் என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு போலீஸார் ஆடிப்போனார்கள்.
பகலில் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு அந்த வீட்டில் இரவில் அவர்கள் கைவரிசை காட்டுவதும், கொள்ளையடிக்கும் பணத்தில் கடவுளையும் கூட்டாளிகளாக்குவதும் தெரிய வந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போது உமா வீடு மட்டுமின்றி பல வீடுகளில் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பங்கை கர்நாடகாவின் பிரபல கோயிலான மாதேசுவரன் மலையில் அமைந்துள்ள மாதேசுவரன் கோயில் உண்டியலில் போட்டு விடுவோம் என்று கூறினர். அவர்களைக் கைது செய்த போலீஸார், அவர்கள் எங்கெங்கு கொள்ளையடித்தனர் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
தெலங்கானாவில் இருந்து ரயிலில் போதை மாத்திரைகள் கடத்தல்... சென்னையில் 3 பேர் கைது!
ப்ளீஸ்... இதையாவது செய்யுங்க... ரஜினிக்கு நெருக்கடி தரும் பாஜக!
குடியால் நேர்ந்த சோகம்...30 வயதில் அகால மரணம் அடைந்த பிரபல பாடகி!