க்ரைம்

`எம்.ஜி.ஆர் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை அபகரித்துவிட்டாங்க'- டிஜிபியிடம் முறையிட்ட நரிக்குறவர் பெண்கள்

காமதேனு

நரிக்குறவ மக்களுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அரசு அளித்த 5 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

எம்ஜிஆர் பாடலுக்கு நடனமாடிய நரிக்குறவர்கள் சமூகத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் டிஜிபி அலுவலகம் வந்தனர். அவர்கள், 5 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக புகார் ஒன்றை அளித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஸ்ரீதர், "முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நடித்த ஒளிவிளக்கு படத்தில் "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க" என்ற பாடலில் நடித்த நரிக்குறவர்கள் சமூகத்தை சேர்ந்த பாயம்மா, லட்சுமி மற்றும் ஆப்பிள் ஆகியோருக்காக இலவசமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் பகுதியில் 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.

பின்னர் இவர்களால் அந்த இடத்தை பராமரிக்க முடியாத காரணத்தினால் நிலத்தை விற்பனை செய்து, அதில் வரும் பணத்தை தனது சொந்தங்களுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்து, அதே இனத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை அணுகியதாகவும், ஒரு ஏக்கர் நிலத்தை 80 லட்சம் என மொத்தமாக 5 ஏக்கர் நிலத்தை நிதிஸ் ஜெயின் என்பவர் வாங்க தயாராக இருப்பதாகவும், அதற்கு பொது அதிகாரம் மாற்ற வேண்டும் என தெரிவித்த கார்த்திகேயன் பின்னர் இவர்களிடம் அசல் பத்திரங்களை வாங்கி கொண்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தார்.

நீண்ட நாட்களாகியும் அசல் பத்திரத்தை தராமல் கார்த்திகேயன் நரிகுறவர்களை ஏமாற்றி வந்ததால், சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து விசாரித்த போது நிதிஸ் ஜெயின் பெயருக்கு 4 ஏக்கர் நிலம் மாற்றப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இவர்கள் சென்று பணத்தை கேட்ட போது பணம் தர மறுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தார்" என்று கூறினார்.

டிஜிபியிடம் புகார் அளித்துள்ள பாதிக்கப்பட்ட நரிக்குறவர் பெண் லட்சுமி, "நிலத்தை அபகரித்த கார்த்திகேயன் மற்றும் நிதிஷ் ஜெயின் ஆகியோர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, ஆவடி மத்திய குற்றப்பிரிவிற்கு சென்று புகார் கொடுக்கும் படி போலீஸார் தெரிவித்தனர். அதன்படி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், அதை பற்றி கேட்டதற்கு ஆள் பற்றாக்குறை என கூறி போலீஸார் அலைக்கழித்தனர். எனவே தங்கள் நிலத்தை உடனே மீட்டு தர வேண்டும்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT