க்ரைம்

கவரிங் நகை கொடுத்து துணை நடிகரை ஏமாற்றிய துணை நடிகை

ரஜினி

சென்னையில் துணை நடிகரிடம் கவரிங் நகைகளை கொடுத்து 1.50 லட்சம் பணத்துடன் தலைமறைவான துணை நடிகையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை வடபழனி நெற்குன்றம்பாதை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (43).சினிமா துணை நடிகரான ரமேஷ் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடன் பணிபுரியும் துணை நடிகை சலோமியா என்பவர் கடந்த மாதம் 17-ம் தேதி ரமேஷை தொடர்பு கொண்டு, தனது பாட்டிக்கு உடல் நலம் சரியில்லை என்றும் அவரது மருத்துவச் செலவுக்கு பணம் தேவைபடுவதால் தனது நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று தருமாறு கேட்டு கொண்டார். இதற்கு ரமேஷ் சம்மதம் தெரிவித்ததை அடுத்து 17-ம் தேதி சலோமியா 43 கிராம் தங்க நகைகளை ரமேஷிடம் கொடுத்து பணம் வாங்கி தருமாறு கேட்டு கொண்டார்.

பின்னர் ரமேஷ், சாலிகிராமம் நெற்குன்றம் பாதை பகுதியில் உள்ள தனக்கு தெரிந்த அடகு கடையில் நகைகளை அடமானம் வைத்து 1.50 லட்ச ரூபாய் பணத்தை சலோமியாவிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு அடகு கடை உரிமையாளர் உத்தம்சந்த்சேட், ரமேஷை தொடர்பு கொண்டு, நீங்கள் அடகு வைத்த நகைகள் போலி என்றும் 1.5 லட்ச ரூபாயை திருப்பி கொடுத்துவிட்டு நகைகளை வாங்கி செல்லுமாறு கேட்டு கொண்டார். இதனை கேட்டு அதிர்ந்துபோன ரமேஷ், உடனே நடிகை சலோமியாவை தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

அதற்கு சலோமியா, அடகு வைத்த நகைகள் என்னுடையதுதான் என்றும் பணத்தை திருப்பி கொடுத்து நகைகளை வாங்கி கொள்வதாக கூறிய சென்றவர் நேற்று வரை பணத்தை திருப்பி தராததால் சந்தேகமடைந்த ரமேஷ், நடிகை சலோமியா வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரை காணவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற ரமேஷ், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை சலோமியா மீது புகார் அளித்தார். அதில், போலி நகைகளை கொடுத்து 1.5 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு தலைமறைவான நடிகை சலோமியா மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு கேட்டு கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான துணை நடிகை சலோமியாவை தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT