க்ரைம்

கத்தியைக் காட்டி ரகளை... காவலர்களிடம் சிக்கித் தப்பிய ரவுடி: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

காமதேனு

கஞ்சா போதையில் ரவுடியின் சகோதரர் ஒருவர் பொதுமக்களிடம் கத்திக்காட்டி ரகளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 11-ம் தேதி திருமங்கலம் பாடிகுப்பம் பகுதியில் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் பொதுமக்களிடம் தகராறு செய்து வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இது தொடர்பாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற ஜெ.ஜெ நகர் காவலர்கள் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ரவுடி நந்தா என்பவரின் சகோதரர் யுவராஜ் கஞ்சா போதையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களைக் கத்தியைக் காட்டி மிரட்டுவது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் சுற்றித் திரிந்த யுவராஜை பிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது மாற்று உடை அணிந்து தப்ப முயன்ற யுவராஜை மடக்கிப் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். கஞ்சா போதையிலிருந்த யுவராஜ் அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

யுவராஜ் கத்தியைக் கட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பொதுமக்களில் ஒருவர் யுவராஜை தட்டிக்கேட்க முயன்றபோது, யுவராஜ் கத்தியை காட்டி மிரட்டுவதும், அவர் அருகே இருந்த பெண் இதைக் கண்டு அலறுவதும், காவல்துறையினர் மிரட்டப்படுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய ஜெ.ஜெ. நகர் காவல்துறையினர் தலைமறைவாக உள்ள ரவுடி யுவராஜை தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT