பெரி வெங்கடேசன் 
க்ரைம்

பாஜக தலைவரான ரவுடி வெட்டிக்கொலை... பழிக்குப் பழியாக தீர்த்துக் கட்டிய கும்பல்!

காமதேனு

சென்னையில் பாஜக பிரமுகரும், ரவுடியுமான பெரி வெங்கடேசன் மர்ம நபர்களால் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

சென்னை தாம்பரம் பெருங்களத்தூர் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பெரி வெங்கடேசன்(30). இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. அண்மையில் பாஜகவில் இணைந்த ரவுடி வெங்கடேசன் தற்போது முடிச்சூர் மண்டலம் எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் பழைய பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள முட்புதரில் வெங்கடேசன் முகங்கள் சிதைக்கப்பட்டு வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இன்று பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் பீர்க்கங்கரணை போலீஸார் சம்பவ இடத்தில் சென்று வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இக்கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல், வெங்கடேசனை கொலை செய்து உடலை முட்புதரில் வீசி சென்றது தெரியவந்தது. தொடர் விசாரணையில் 2015-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் வெங்கடேசன் முக்கிய குற்றவாளியாக இருந்தால் அதற்கு பழிவாங்கும் விதமாக அவரை தீர்த்துக் கட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து வெங்கடேசன் கொலை வழக்கில் தொடர்புடைய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT