கமலிடம் கார் பரிசு பெற்ற பெண் ஓட்டுநர் ஷர்மிளா 
க்ரைம்

கமலிடம் கார் பரிசு பெற்ற ரைடர் ஷர்மிளா மீது வழக்கு.... காவல் அதிகாரியை வீடியோ எடுத்து பரப்பியதாக புகார்!

காமதேனு

பணியில் இருந்த பெண் காவல் அதிகாரியை தரக்குறைவாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக, ரைடர் ஷர்மிளா என்பவர் மீது கோவை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் முதல் பெண் தனியார் பேருந்து ஓட்டுநர் என்ற அடைமொழியுடன் சமூக ஊடக பக்கங்களில் அதிக அளவில் பாராட்டு பெற்றவர் இளம் பெண் ஷர்மிளா. இவர் குறித்த செய்தி தொகுப்புகள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் ஏராளமான பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி ஆகியோர் ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இதனிடையே கனிமொழி எம்.பி., இவரது பேருந்தில் பயணித்ததை தொடர்ந்து பேருந்து உரிமையாளருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பணியில் இருந்து விலகுவதாக ஷர்மிளா அறிவித்தார். இந்த தகவலும் சமூக வலைதளங்களில் பரவியதியடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவரை நேரில் அழைத்து கார் ஒன்றை பரிசாக வழங்குவதாக அறிவித்தார்.

இதிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தபோதும், தற்போது கமலின் உதவியால் பெறப்பட்ட மராசோ என்ற காரை வாடகைக்கு ஓட்டி ஷர்மிளா பணி செய்து வருகிறார்.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்ற ஓட்டுநர் ஷர்மிளா

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி கோவை சத்தி சாலையில், சங்கனூர் சந்திப்பில் ஷர்மிளா ஓட்டிச் சென்ற காரை, அங்கு பணியில் இருந்த காட்டூர் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு துணை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி என்பவர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை இயக்கியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே ஷர்மிளா, போக்குவரத்து சிறப்பு துணை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் வீடியோவை பதிவிட்டு, அதில் அவர் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், இது தொடர்பாக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கமல் பரிசளித்த காருடன் ஓட்டுநர் ஷர்மிளா மற்றும் அவரது குடும்பத்தினர்

இந்த வீடியோவிற்கு பின்னூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்த பலரும், அநாகரிகமான வார்த்தைகளால் பெண் காவலரை விமர்சித்திருந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.

இதன் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பிரபலம் என்பதை பயன்படுத்தி, போலீஸ் குறித்து அவதூறாக தகவல் பரப்பிய பெண் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

SCROLL FOR NEXT