ஒன்றரை வயது மீனாட்சி 
க்ரைம்

மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பலியான சோகம்

காமதேனு

மீன் தொட்டியில் ஒன்றரை வயது பெண் குழந்தை தவறிவிழுந்து பலியானது.

சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம், வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ். சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி கெளசல்யா. மகள் மீனாட்சி ஒன்றரை வயதுக் குழந்தை.

இன்று காலை யுவராஜ் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்ட நிலையில் மனைவியும் குழந்தையும், வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது கௌசல்யா விளையாட்டுப் பொருட்களை குழந்தை மீனாட்சியிடம் கொடுத்துவிட்டு சமையலறையில் சமைக்கச் சென்றார். பின்னர் குழந்தை மீனாட்சி தனியாக விளையாடிக் கொண்டிருந்த போது பொம்மை ஒன்று அருகில் இருந்த மீன் தொட்டியில் விழுந்து விட்டது. உடனே குழந்தை மீன்தொட்டியில் விழுந்த பொம்மையை எடுக்க முயன்றபோது தவறி மீன் தொட்டியில் விழுந்தது.

சிறிது நேரம் கழித்து சமையல் முடித்துவிட்டு வெளியே வந்த கௌசல்யா குழந்தை மீனாட்சியைக் காணவில்லையே என்று அதிர்ச்சி அடைந்தார். அப்போது குழந்தை மீன் தொட்டியில் மயங்கிய நிலையில் இருந்தைக் கண்டு கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அம்பத்தூர் போலீஸார் குழந்தை மீனாட்சி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தை, மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT