க்ரைம்

பள்ளிக் கழிவறையில் 4 வயது மாணவியை மிரட்டி பலாத்காரம்... 40 வயது பியூன் கைது!

காமதேனு

மும்பையில் தனியார் பள்ளியின் கழிவறையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது பியூன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் மேற்கு புறநகர் கண்டிவால் பகுதியில் தனியார் பள்ளியில் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை பள்ளி நேரங்களில் கழிவறையில் 4 வயது சிறுமியை 40 வயதான பியூன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்றும், அப்படி சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார்.

ஆனாலும், பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் பள்ளியில் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி, போரிவலியில் உள்ள சதாப்தி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் சம்பவம் குறித்த விசாரணை நடத்திய போலீஸார், குற்றவாளியை நேற்று கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றவாளி கைது செய்யப்பட்டதையடுத்து பல மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அலட்சியம் காட்டும் பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT