ஐடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.26 கோடி பணம்  
க்ரைம்

நகைக்கடை உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் ஐடி சோதனை... கட்டுக்கட்டாக ரூ.26 கோடி ரொக்கப்பணம் சிக்கியது!

சந்திரசேகர்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் நகைக்கடை உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.26 கோடி பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் சுரானா ஜூவல்லர்ஸ் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் நகைக்கடை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவரது அலுவலகத்தில் கோடிக்கணக்கிலான பணம், உரிய ஆவணங்கள் இல்லாமல் கைமாறுவதாகவும், வருமான வரித்துறைக்கு உரிய வரிகளை செலுத்தாமல் இழுத்தடித்து வந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து இன்று அவரது நகைக்கடை, வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் பல்வேறு குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 30 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்றது.

ரொக்கப்பணம்

இந்த சோதனையின் இறுதியில் கணக்கில் வராத ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ.90 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பர்னிச்சர் பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த பணத்தின் மதிப்பு ரூ.26 கோடி என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக பர்னீச்சர் பொருட்களுக்குள் கட்டுக்கட்டாக பணம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணக்கட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணக்கட்டுகளை எண்ணுவதற்கே பல மணிநேரங்கள் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரொக்கப்பணம்

இதனையடுத்து தொழிலதிபரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை 7 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தொழிலதிபருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்யப்படும் என்றும் விசாரணையின் முடிவில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு சரியாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறதா? வருமான வரி செலுத்தப்பட்டிருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT