பில்லி சூனியம் 
க்ரைம்

பகீர்; சூனியம் வைத்ததாக சந்தேகம்... மனைவியைக் கொன்ற கணவன்!

காமதேனு

சூனியம் வைத்ததாக கூறி மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹமிர்பூரில் ரத்கோட்வாலி நகரின் ஜூகியானா பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ்சந்திரா அனுராகி(38). இவரது மனைவி சங்கீதா தேவி. இவர்களுக்குத் திருமணமாகி 18 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

குடும்பத் தகராறு

பல ஆண்டுகளாக சூதாட்டத்திற்கும், மதுவிற்கும் ஹரிஷ்சந்திரா அடிமையாகியுள்ளார். இதனால் வருமானத்தை இழந்ததால்,ஹரிஷ் சந்திராவிற்கும், சங்கீதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கொலை

வாக்குவாதம் தொடர்ந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு சங்கீதா டெல்லியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்தார்.

இந்நிலையில், நேற்று சங்கீதாவிற்கும், ஹரிஷ் சந்திராவுக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. அப்போது தனது மனைவியின் கழுத்தை நெரித்து ஹரிஷ் கொலை செய்தார். இதன் பின் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கீதா தேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஹரிஷ் குழந்தைகளிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, தான் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதற்காக சங்கீதா சூனியம் வைத்ததாகவும், அதனால், சூதாட்டத்தில் தான் தொடர்ந்து தோற்றதாகவும் ஹரிஷ் சந்தேகப்பட்டார். இதன் காரணமாக சங்கீதாவை அவர் கொலை செய்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஹரிஷ் சந்திராவை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT