க்ரைம்

மனைவி கொடுத்த புகாரால் போலி போலீஸ்காரர் கைது!

காமதேனு

காவல்துறையில் பணிபுரிந்து வருவதாகக் கூறி திருமணம் செய்து ஏமாற்றியதாக, மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிவேதா என்ற பெண்ணுடன் இவருக்கு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் தற்போது பூந்தமல்லியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது கணவர் தினகரன் காவல்துறையில் பணிபுரிவதாகத் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவரின் மனைவி நிவேதா பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தினகரனைப் பிடித்து விசாரித்தனர். நேற்று நடைபெற்ற விசாரணையில், அவர் காவலராக பணிபுரியவில்லை என்பதும், போலியான அடையாள அட்டையை வைத்துக் கொண்டு உயர் அதிகாரி ஒருவருக்கு வாகனம் ஓட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாகத் தினகரன் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தினகரனிடமிருந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட போலீஸ் அடையாள அட்டையை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT