க்ரைம்

வரதட்சணைக்காக மனைவி கூட்டுப் பாலியல் பலாத்காரம்!- கணவனால் நடந்த கொடுமை

காமதேனு

தன் மனைவி ரூ.1.5 லட்சம் வரதட்சணை கொடுக்காததால் உறவினர்களைக் கொண்டு கூட்டுப் பலாத்காரம் செய்து அதை டியூப்பில் வெளியிட்ட கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் கமான் பகுதியைச் சேர்ந்த வாலிபர், ஹரியாணாவைச் சேர்ந்த பெண்ணை 2019-ம் ஆண்டு திருமணம் செய்தார். இதன் பின் இவர்கள் ராஜஸ்தானில் குடும்பம் நடத்தி வந்தனர். அந்த பெண்ணிடம் மாமியார் ரூ.1.5 லட்சம் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அந்த பெண் கோபித்துக் கொண்டு சில நாட்களுக்கு முன் தன் தாய் வீட்டிற்குக் சென்று விட்டார்.

அவரை ஏமாற்றி மீண்டும் தனது வீட்டிற்கு அவரது கணவர் அழைத்து வந்துள்ளார். அங்கு தனது உறவினர்கள் இருவரைக் கொண்டு தன் மனைவியை பலாத்காரம் செய்யச் சொல்லி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். வரதட்சணை தர முடியாததால், இந்த காட்சியை யூடியூப்பில் பதிவேற்றி அந்த பணத்தை சம்பாதித்துக் கொள்வேன் என்றும் மனைவியிடம் கூறியுள்ளார். அத்துடன் அந்த காட்சியையும் அவர் யூடியூப்பில் பதிவேற்றியுள்ளார். இதுகுறித்து பரத்பூர் கமான் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், " வரதட்சணை கொடுக்காததால் உறவினர்கள் என்னை கூட்டு பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து அந்த வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், ஐந்து நாட்களுக்கு முன் என்னை ஒரு பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். அங்கிருந்து தப்பி வந்தேன்" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி தவுலத் சாஹூ கூறுகையில், "தனது கணவர் மற்றும் இரண்டு உறவினர்கள் மீது ஒரு பெண் பாலியல் புகார் செய்துள்ளார். அத்துடன் தன்னை பலாத்காரம் செய்து அந்தக் காட்சியை யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை" என்று கூறினார்.

SCROLL FOR NEXT