பலாத்காரம் 
க்ரைம்

பேரதிர்ச்சி... 19 வயது பெண் செக்யூரிட்டி கூட்டு பலாத்காரம்... பகுதி நேர வேலைப் பார்த்த போது பரிதாபம்!

காமதேனு

காஜியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பகுதி நேர வேலையாக செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் உத்தரப்பிரதேசத்தில் உள்ள காஜியாபாத்தில் அவரது அத்தையுடன் வசித்து வந்தார். அத்துடன் காஜியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2 மாதங்களாக செக்யூரிட்டி கார்டாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் செக்யூரிட்டி ஆபீஸர் முன்னிலையில், அந்த இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் விஷம் குடித்த நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண் நேற்று சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கைது

இந்நிலையில்,அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டி அதிகாரி மேற்பார்வையில் 3 இளைஞர்களால் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் போலீஸில் இளம்பெண்ணின் அத்தை புகார் கொடுத்தார். இந்த குற்றம் தொடர்பாக அஜய்(32) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

காவல் துறை அதிகாரி விவேக் சந்த் யாதவ் கூறுகையில்," பெண் செக்யூரிட்டியின் அத்தை அளித்த புகாரின்பேரில், மேற்பார்வையாளரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களின் பெயரையும் கூறினார்.

தனியார் மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் இளம்பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்தோம். அவளால் பேச முடியாமல் போனதால், மாஜிஸ்திரேட்டிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார். அதில் தன் செக்யூரிட்டி மேற்பார்வையாளர் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்" என்று கூறினார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT