கைது செய்யப்பட்ட பாலசுப்ரமணியம்
கைது செய்யப்பட்ட பாலசுப்ரமணியம் 
க்ரைம்

பிளேடால் கிழிப்பு, சிகரெட்டால் சூடு... நான்கு வயது மகளை சித்ரவதை செய்த தந்தை கைது!

காமதேனு

மனைவி வெளிநாட்டில் இருக்கும் நிலையில்  அவரிடம் பணம் கேட்பதற்காக தனது நான்கு வயது பெண் குழந்தையை பிளேடால் கிழித்தும்,  சிகரெட்டால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்திய கொடூர தந்தையை அதிராம்பட்டினம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (31).  இவருக்குத் திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.  மனைவி மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். இதனால் குழந்தை தந்தையின் பாதுகாப்பில் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் மதுபோதைக்கு அடிமையான பாலசுப்பிரமணியன், மது குடிக்க பணம் இல்லாதபோது மனைவியிடம் பணம் கேட்டிருக்கிறார். அவர் பணம் அனுப்ப மறுத்ததால்  குழந்தையை துன்புறுத்தி வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பி மிரட்டி பணம் கேட்டிருக்கிறார்.

மது போதையில், இருக்கும்போது குழந்தையை பிளேடால் கிழித்தும், சிகரெட்டால் சூடுவைத்தும் துன்புறுத்தி வந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஆர்வலர் ஒருவருக்கு கிடைத்தது. இது குறித்து உடனடியாக காவல்துறையின் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றனர், இதனையடுத்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு  சம்பந்தப்பட்ட குழந்தையை மீட்டு தஞ்சை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பாலசுப்ரமணியத்தை கைது செய்த போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவியை ஊருக்கு வர வைப்பதற்கு இதுபோன்ற வன்செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து வழக்குப் பதியப்பட்டு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார்  சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தையை பிளேடால் கிழித்துக் கொடுமை செய்த தந்தையின் செயல் அப்பகுதி மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT