பழனி அரசு மருத்துவமனை 
க்ரைம்

பழனி கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவருக்கு நேர்ந்த சோகம்... கதறும் குடும்பத்தினர்

கே.காமராஜ்

பழனி முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட வந்தவர், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். பக்தர்கள் பழனி மலை உச்சியில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல படிப்பாதை பிரதானமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதைத் தவிர ரோப்கார் மற்றும் இழுவை ரயில் ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது.

பழனி முருகன் கோயில் மலைப்பாதை

நேற்று விடுமுறை தினம் என்பதால் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்திருந்தனர். இதில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரையைச் சேர்ந்த முருகன் (51) என்பவர் தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்திருந்தார். படிப்பாதை வழியாக குடும்பத்தினர் அனைவரும் கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென முருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

முருகனின் உடல் மருத்துவமனைக்குள் எடுத்து செல்லப்படுகிறது

இதைக்கண்ட கோயில் பணியாளர்கள் உடனடியாக அவரை ரோப் கார் மூலமாக மலை உச்சியில் இருந்து அடிவாரத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் திருக்கோயில் ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

SCROLL FOR NEXT