படுகொலை செய்யப்பட்ட ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் 
க்ரைம்

பழிக்குப் பழியாக பாஜக பிரமுகர் கொலை... 15 பேருக்கு மரண தண்டனை: கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காமதேனு

பாஜக பிரமுகர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கேரளா மாநில பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்தவர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ். கடந்த 2021 டிசம்பர் 19-ம் தேதி, ரஞ்சித் ஸ்ரீநிவாஸ் வீட்டில் இருந்தபோது, 15 பேர் கொண்ட கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி, வெட்டிப் படுகொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்த போலீஸார், தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

பாஜக பிரமுகர் ராஜீவ் ஸ்ரீனிவாஸ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேர்.

அப்போது எஸ்டிபிஐ அமைப்பின் மாநில செயலாளரான ஷான் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்வினையாக ரஞ்சித்தை எஸ்டிபிஐ மற்றும் தற்போது தடை செய்யப்பட்டுள்ள பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் நைஸம், அஜ்மல், அனூப் உட்பட 15 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலை செய்யப்பட்ட ராஜீவ் உடலுக்கு அஞ்சலி

இந்த வழக்கு மாவேலிக்கரா கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி முக்கிய குற்றவாளிகள் மற்றும் கொலைக்குப் பாதுகாப்பாக வீட்டின் வெளியே பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்தவர்கள் உட்பட 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதேவி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT