வருங்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பெண் காவலர்களை இழிவாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, வீடியோவை யூடியூப் சேனலில் வெளியிட்ட ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சவுக்கு சங்கர் மீது சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இதே புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேனியில் வைத்து கைது செய்யப்படும்போது அவரது காரில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேனி போலீஸார் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டு, அதற்கான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தாயார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு இன்று நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டதற்கான அசல் ஆவணங்களை போலீஸார் தரப்பில் ஒப்படைத்தனர். சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும். என்னவெல்லாம் செய்ய மாட்டார் என பட்டியலிட்டு நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார். அதனை ஏற்க முடியாது. அவரது உத்தரவாத மனுவின் அடிப்படையில் வழக்கு குறித்து விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
வீடியோ காலில் எதற்கு பேசுற? மனைவியைக் கொலை செய்து புதைத்த கணவன்!
வங்கக்கடலில் 'ரெமல்' புயல்... 26ம் தேதி கரையைக் கடக்கும் என கணிப்பு!
மெக்சிகோவில் பிரச்சாரத்தில் மேடை சரிந்து விபத்து: 5 பேர் பலி; 50 பேர் படுகாயம்!