சம்பவம் நடந்த இடத்திலும், மருத்துவமனையிலும் விசாரணை நடத்தும் போலீஸார். 
க்ரைம்

பகீர்... கோயிலில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக் கொல்ல முயற்சி!

காமதேனு

கோயிலில் வழிபட வந்த இளம்பெண்ணை மறைந்திருந்த இளைஞர் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், அபோஹரில் உள்ள பஸ்தியைச் சேர்ந்தவர் அர்ஷிதா(22). இவர் கவுஷாலா சாலையில் உள்ள ஷோரூமில் வேலை செய்து வந்தார். இன்று தாயுடன் பாசில்கா சாலையில் உள்ள ஜோஹ்ரி மந்திர்க்கு அர்ஷிதா வழிபட வந்தார்.

கொலை செய்ய முயற்சி

அப்போது அங்கு மறைந்திருந்த இளைஞர், திடீரென அர்ஷிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட இளைஞர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

மந்திரில் நடந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அர்ஷிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.தற்போது அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து அர்ஷிதாவின் தாய் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர், கடந்த 2 நாட்களாக அர்ஷிதாவை வழிமறித்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஷோரூம் வேலை செய்தவர்களிடம் அர்ஷிதா புகார் கூறியுள்ளார். அந்த இளைஞர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகிறோம் என்று போலீஸார் கூறினர். ஒருதலைக் காதலால் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

கோயிலில் பட்டப்பகலில் இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT