33 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி 
க்ரைம்

திருப்பத்தூர் : திடீர் பரபரப்பு... 33 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

காமதேனு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூருக்கு அருகே உள்ளது மின்னூர் அரசு பள்ளி. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இன்று காலை திடீரென அலர்ஜி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.

கையில் அலர்ஜி

இது தொடர்பான தகவல் அறிந்து விரைந்து சென்ற மாவட்ட ஆட்சியர் மாணவ, மாணவிகளிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து, மாணவர்களின் அலர்ஜிக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மின்னூர் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். வழக்கம் போல் இன்று காலை பள்ளி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அடுத்தடுத்து மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக தனக்கு உடலில் திடீரென ஒவ்வாமை ஏற்படுவதாக ஆசிரியரிடம் முறையிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் விசாரணை

ஒரு மணி நேரத்திற்குள்ளாக 33 மாணவர்களுக்கும், 1 ஆசிரியருக்கும் இந்த பாதிப்பு பரவியது. உடனடியாக அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 5 மாணவர்களின் உடலில் பாதிப்புகள் அதிகம் கண்டறியப்பட்டதால், அவர்கள் உடனடியாக மேல் சிகிச்சைக்காக ஆம்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காற்று அல்லது உணவின் மூலம் இந்த அலர்ஜி ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. முழுமையான ஆய்வுக்குப் பிறகே அலர்ஜிக்கான காரணம் குறித்து தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT