இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த நடிகர் வாராகியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரில் அமைந்துள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வாராகி (46). இவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளன. வாராகி சிவா மனசுல புஷ்பா என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்நிலையில் இவர் வசித்து வரும் அதே குடியிருப்பை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் வாராகி அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வாராகி அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியே வந்துள்ளார்.
பின்னர் அந்த பெண் தனியாக மேன்பவர் ஏஜென்சி நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். வேலையை விட்டு வந்த பின்னரும் வாராகி அந்த பெண்ணை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேலும் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் இது குறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாராகி மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் நடிகரும், தயாரிப்பாளருமான வாராகி மீது பெண் வன்கொடுமை சட்டம், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட வாராகியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே வாராகி மீது சேலையூர் உட்பட 4 காவல் நிலையங்களில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.