க்ரைம்

பெண்ணை நம்பி மகளை ஒப்படைத்த தந்தை: 80 பேரால் மாணவிக்கு நடந்த கொடுமை

காமதேனு

13 வயது மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 80 பேரில் 74 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடுமையான சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.

ஆந்திரா மாநிலம், குண்டூரை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட தனது தாயாருடன் மருத்துவமனையில் இருந்துள்ளார் மாணவி. அப்போது, மருத்துவமனை ஊழியர் சொர்ணகுமாரி என்ற பெண், மாணவியின் பெற்றோரிடம் நட்பாக பழகியதோடு, உங்கள் மகளை நான் தத்தெடுத்துக் கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனிடையே, மாணவியின் தாயார் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார்.

இந்நிலையில், சொர்ணகுமாரியின் ஆசைவார்த்தையை நம்பிய மாணவியின் தந்தை, தனது மகளை அவரிடம் அனுப்பிவைத்துள்ளார். இதனையடுத்து, மாணவியை அழைத்துச் சென்ற சொர்ணகுமாரி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இதனிடையே, சொர்ணகுமாரியிடம் இருந்து தப்பிய மாணவி, குண்டூரில் உள்ள தனது தந்தையிடம் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை சொல்லி கதறியுள்ளார். மகளுக்கு நடந்த கொடுமையால் அதிர்ச்சியடைந்த தந்தை, இது குறித்து குண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சொர்ணகுமாரியை கைது செய்தனர். மேலும், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 80 பேரில் 74 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 6 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 80 பேரால் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் குண்டூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

SCROLL FOR NEXT