காடுத்தீ பரவ காரணமாக இருந்த 4 பேர் கைது 
க்ரைம்

மக்களை மிரட்டிய காட்டுத்தீ... தேயிலை தோட்டத்தில் நெருப்பு வைத்த 4 பேர் கைது!

காமதேனு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுத்தீ பரவ காரணமாக இருந்த தேயிலைத் தோட்ட உரிமையாளர் உட்பட நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை ஃபாரஸ்ட்டேல் பகுதி அடர்ந்த வனங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு வனபகுதியை ஒட்டி ஏராளமான தேயிலை தோட்டங்களும், குடியிருப்புகளும் அமைந்துள்ளன. அவ்வப்போது இந்த வனப்பகுதியில் தீ விபத்து நேர்வது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் பல இடங்களிலும் காய்ந்து கருகி உள்ள மரங்கள் அவ்வப்போது தீப்பிடித்து எரிந்து வருகின்றன.

குன்னூர் அருகே வனப்பகுதியில் கட்டுக்கடங்காமல் பரவிய காட்டுத்தீ

அந்த வகையில் கடந்த 12-ம் தேதி இரவு ஃபாரஸ்ட்டேல் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சாம்பிராணி மரங்கள், கற்பூர மரங்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் தீ பரவியதால் ஏராளமான மரங்கள் மற்றும் செடிகள் கொழுந்து விட்டு எரிந்தன. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் தீயணைத்து துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆனால், நீண்ட நேரம் போராடியும் அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நேற்று, இன்று என இரண்டு நாட்களாக போராடி இன்று காட்டுத்தீயை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

2 நாட்கள் போராடி தீயை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வந்த வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும்

இதனிடையே வனத்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த தீ விபத்து தானாக ஏற்பட்டது அல்ல என்பது தெரியவந்தது. வண்டிச்சோலை பகுதியில் எபினேசர் ஜெயசீலபாண்டியன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் கடந்த 12-ம் தேதி கவாத்து செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளது. அப்போது தேயிலை செடிக்கழிவுகளை அங்கிருந்து பணியாளர்கள் தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது தீ கட்டுக்கடங்காமல் பரவி வனப்பகுதியில் காட்டுத் தீயாக பரவியுள்ளது. இதையடுத்து தோட்ட உரிமையாளர் எபினேசர் ஜெயசீலபாண்டியன், ஊழியர்கள் கருப்பையா (63), மோகன் (35), ஜெயக்குமார் (60) ஆகிய நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வரும் குன்னூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். காட்டுத் தீ இன்னும் சற்று நேரம் கவனிக்கப்படாமல் இருந்திருந்தால், அது குடியிருப்பு பகுதிகளையும் எரித்து சாம்பலாக்கி இருக்கும் என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, தேயிலை தோட்டங்களில் கவாத்து பணிகள் செய்யும்போது கழிவுகளை தீ வைத்து எரிக்கக்கூடாது என தற்போது வனத்துறையினர் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

மாங்கல்ய வரம் தரும் ‘காரடையான் நோன்பு... வழிபடும் முறை... சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

இந்த 23 வகை நாய்களை இனி வீட்டில் வளர்க்கக்கூடாது... மத்திய அரசு அதிரடி உத்தரவு!

வாட்ஸ்-அப் செயலியில் அசத்தலான அப்டேட்... பயனர்கள் மகிழ்ச்சி!

பகீர்... காதலியின் கையைத் துண்டித்த காதலன்: வேறு ஒருவருடன் நிச்சயமானதால் வெறிச்செயல்!

அதிமுகவுடன் தான் கூட்டணியா?...தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT