சினிமா

என்னது கரோனா பாதிப்பா..?: இயக்குநர் மணிரத்னம் தரப்பு விளக்கம்

காமதேனு

இயக்குநர் மணிரத்னத்திற்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாக வந்த செய்தியை அடுத்து அவர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இயக்குநர் மணிரத்னம், தற்போது கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கி இருக்கிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்திற்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இதை மணிரத்னம் தரப்பு மறுத்துள்ளது.

'பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த இயக்குநர் மணிரத்னத்துக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து நேற்றிரவு கரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருக்குத் தொற்று இல்லை என்று மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார்’ என்று மணிரத்னம் தரப்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT