‘கழுகு2', 'நோட்டா', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். தற்போது சொந்த வீடு வாங்கியிருப்பது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், ‘சொந்த வீடு வாங்கி, என் அம்மா அப்பாவின் கனவை நான் நிறைவேற்றுவேன் என என் வாழ்வில் ஒருபோதும் நினைத்ததே இல்லை. இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவரிடமும் மிக தாமதமாகப் பகிர்ந்துகொள்வதற்கு மன்னிக்கவும். நீங்கள் மிகவும் ஆசைப்பட்டு விரும்பிய ஒரு கனவு நிச்சயமாக உங்களது கடின உழைப்பின் மூலமாகவும் உங்கள் பெற்றோரின் ஆதரவு மூலமாகவும் கண்டிப்பாக நிறைவேறும்.
எனக்கு 19 வயதாக இருக்கும்போது இந்த வீட்டைப் பார்த்து பதிவு செய்தோம். ஆனால் கரோனா பிரச்சினை மற்றும் என் வாழ்வில் இடையில் நடந்த மிக மோசமான விபத்து, நண்பர்களை இழந்தது போன்ற பல பிரச்சினைகள் காரணமாக இந்த வீட்டுக்குள் நுழைவதற்கு சரியான நேரம் அமையாமல் இருந்தது. ஆனால் இறுதியாக அது தற்போது நடந்துவிட்டது. கடவுளுக்கு நன்றி. 19 வயதில் நான் ஒரு வீட்டை எனதாக்குவேன் என நினைக்கவே இல்லை. ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்’ என்று மிகவும் நெகழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் யாஷிகா ஆனந்த். வீட்டின் சாவியின் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த வருடம் விபத்தில் சிக்கி மீண்ட யாஷிகா, தற்போது மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்திருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.