சினிமா

நடிகை மும்தாஜ் வீட்டிலிருந்து தப்பிய பெண்கள்... சுற்றித் திரிந்தவர்களை மீட்டது போலீஸ்: நடந்தது என்ன?

காமதேனு

நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்ய பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடி வந்து சாலையில் சுற்றி திரிந்த 2 பெண்களை போலீஸா மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை அண்ணாநகர் இண்டாவது பிரதான சாலை சந்திப்பில் இன்று மதியம் இரண்டு பெண்கள் சந்தேகத்திற்கிடமாக சாலையில் அமர்ந்திருந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனே காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கட்டுபாட்டு அறையில் இருந்து அண்ணாநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று சாலையோரம் அமர்ந்திருந்த இரு பெண்களை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பிஹார் மாநிலத்தை சேர்ந்த முஸ்கான்(19), அவரது தங்கை பல்லக்(17) என தெரியவந்தது. தொடர் விசாரணையில் இவர்கள் இருவரும் அண்ணாநகர் 2-வது பிரதான சாலை எச் பிளாக்கில் வசித்து வரும் நடிகை மும்தாஜ் வீட்டில் தங்கி கடந்த 6 வருடங்களாக வீட்டு வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்ய பிடிக்காததால் இன்று மதியம் வீட்டை விட்டு ஓடிவந்த இருவரும் எங்கு செல்வது என்று தெரியாமல் சாலையில் சுற்றி திரிந்தது தெரியவந்தது. மேலும் தங்களுக்கு நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்ய பிடிக்கவில்லை என்றும், எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு போலீஸிடம் கேட்டு கொண்டனர்.

இதனையடுத்து போலீஸார் இது குறித்து நடிகை மும்தாஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு பெண்களையும் காப்பகத்தில் ஒப்படைத்த போலீஸார் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் வந்த பின்பு அவர்களை ஒப்படைக்க உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT