சினிமா

வினாயகனால் விபரீதம் ஏற்படுமா? - ‘ஜெயிலர்’ படத்தைச் சுற்றும் சர்ச்சை

காமதேனு

புகழ்பெற்ற மலையாள நடிகர் விநாயகன் விஷால் நடிப்பில் வெளிவந்த ‘திமிரு’ திரைப்படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து கலக்கியவர். தமிழில் கடைசியாக தனுஷின் ‘மரியான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் இவர் நடித்த ‘ட்ரான்ஸ்’, ‘படா’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் நற்பெயர் வாங்கித் தந்தவை.

தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த விஷயம்தான் தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஏனென்றால் இவர் சமீபத்தில்தான் ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் போலீஸில் சிக்காமல் தலைமறைவாக இருந்துள்ளார். அதனால் கேரள அரசு இவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. அதன் பிறகே இவர் வெளியில் வந்து சரணடைந்திருக்கிறார். தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் இவருக்குத்தான் ‘ஜெயிலர்’ பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், இப்படிப்பட்ட ஒருவரைத் தனது படத்தில் ரஜினி ஏன் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்ற கேள்வி தான் தற்போது அனைவருக்கும் எழுந்துள்ளது.

ஒரு வேளை ரஜினிக்கு இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விஷயம் தெரியுமா, தெரியாதா என்ற ரீதியிலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஜாமீனில் வெளிவந்திருக்கும் விநாயகன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். இது படத்தின் படப்பிடிப்புக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.

SCROLL FOR NEXT