சினிமா

பாலா படத்திலிருந்து சூர்யா விலகக் காரணம் என்ன?: வெளியானது புதுத்தகவல்

காமதேனு

`வணங்கான்' படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியதற்கான காரணம் தற்போது வெளியாகியிருக்கிறது.

`வணங்கான்' படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக படத்தின் இயக்குநர் பாலா திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும்" என்று கூறியிருந்தார்.

ஆனால், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சம்பந்தமாகவே சூர்யா - பாலா இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அதனால் கோபம் அடைந்த இயக்குநர் பாலா, பிரிந்துவிடலாம் என்று சொல்லவும், சூர்யாவும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. ஒரு மாதம் கன்னியாகுமரியில் நடைபெற்ற ஷூட்டிங்கில் இரண்டே காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன. இந்த ரீதியில் தொடர்ந்தால் பட்ஜெட் எகிறிவிடும் என்ற அச்சத்தால் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பின்வாங்கியதாகவும் தெரிகிறது. ஆனாலும் இத்தனை ஆண்டு உறவை சண்டையுடன் முறித்து கொள்வதை காட்டிலும் கைகுலுக்கி சந்தோஷமாக விடைபெற்றுக் கொள்ளவே இந்த முடிவு என்றும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றன.

அதே சமயம் வணங்கான் படத்தின் வேலைகள் நடைபெற்று வருவதால் படத்தின் நடிக்க இருக்கும் நடிகர் குறித்த பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. முதலில் சூர்யா நடிக்க இருந்த ரோலில் ஆர்யா நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அது அதர்வா என்று தகவல் பரவுகிறது. பாலாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஃபைனான்சியர் செட் ஆகாததால் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் இதுவரையில் எதுவும் வெளியாகவில்லை. எல்லாம் பாலாவுக்கே வெளிச்சம்!

SCROLL FOR NEXT