சினிமா

திருச்சிக்கு வந்த விக்ரம்...திக்குமுக்காடிய ரசிகர்கள்: ‘கோப்ரா’ பற்றி சீயான் சொன்ன புது தகவல்!

காமதேனு

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த ’கோப்ரா’ திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழாவில் நடிகர் விக்ரம் மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. ஸ்ரீநிதி ஷெட்டி, இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் முன்வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.

இவ்விழாவினில் பேசிய நடிகர் விக்ரம், “நான் திருச்சிக்கு சிறு வயதில் வந்திருக்கிறேன். நிறைய சுத்தியிருக்கிறேன், அப்போதே செண்ட்ஜோசப் கல்லூரி பிடிக்கும். இக்கல்லூரியில் நீங்கள் படிப்பது பெருமை. ‘கோப்ரா’ படத்தைப் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது. உங்களுக்கு ‘அந்நியன்’ பிடிக்குமெனில் அது இதில் இருக்கிறது, அதைத்தாண்டி சயின்ஸ் ஃபிக்சன் இருக்கிறது. எமோஷன், காமெடி, ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும். அஜய் ஞானமுத்துவின் முதல் இரண்டு படங்களும் வித்தியாசமாக இருக்கும். அதே போல் இந்தப்படமும் மிக வித்தியாசமாக செய்துள்ளார். படம் மிக ஃப்ரெஷ்ஷான படமாக இருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி” என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது பேசிய நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி, “தமிழில் எனக்கு முதல் படம், படத்திற்காக நானும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக சிறப்பான படைப்பாக வந்துள்ளது. உஙகள் அனைவருக்கும் பிடிக்கும்” என தெரிவித்தார். நடிகை மீனாட்சி பேசும்போது, “ நாமெல்லாம் சில வருடம் ஒரே விசயத்தை செய்தால் சலிப்பாகிவிடுவோம் ஆனால் அவர் 61 வது படத்திலும் முதல் படம் போல் உழைக்கிறார்” எனக் கூறினார். தொடர்ந்து பேசிய நடிகை மிருணாளினி, “முதலில் விக்ரம் சாருடன் நடிப்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவரது படங்களை தியேட்டரில் ரசிகையாக பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடனே நடிப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை” என தெரிவித்தார்

நிகழ்வின் முடிவில் கல்லூரி மாணவர்கள் இணைந்து விக்ரம் அவர்களின் உருவப்படம் வரைந்த பெயிண்டிங்கை பரிசாக அளித்தார்கள்.

SCROLL FOR NEXT