சினிமா

பாலியல் வழக்கில் தப்பியோடிய நடிகர் சரணடைய முடிவு!

காமதேனு

பாலியல் வழக்கில் தப்பியோடிய நடிகர் வரும் 30-ம் தேதி இந்தியா திரும்ப இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகை ஒருவர், நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது போலீஸில் புகார் கொடுத்தார். இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்து துபாய்க்கு தப்பி ஓடிய விஜய் பாபுவை கைது செய்ய கொச்சி போலீஸார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதற்கிடையே அவர் அங்கிருந்து ஜார்ஜியா நாட்டுக்கு தப்பிச் சென்றார். அவர் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. அடுத்த கட்டமாக அவர் சொத்துகளை முடக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதனால் விஜய் பாபு சரணடைய தீர்மானித்துள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தில் விஜய் பாபுவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. விசாரணை தொடங்கும் போது விஜய் பாபு, துபாய் சென்றுவிட்டதாகவும், பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு விட்டதால் இந்தியா திரும்ப முடியவில்லை என்றும், விசாரணை அதிகாரி முன்போ, நீதிமன்றத்திலோ ஆஜராக தயாராக இருப்பதாகவும் அவருடைய வழக்கறிஞர் கூறினார். அதோடு அவர், வரும் 30-ம் தேதி இந்தியா திரும்புவதற்காக எடுத்துள்ள விமான டிக்கெட்டையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பின்னர் மனுவை, நீதிபதி ஒத்தி வைத்தார். இந்த விசாரணை இன்றும் நடக்கிறது. பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் இந்திய தூதரகத்தின் சிறப்பு அனுமதி பெற்று அவர் கேரளா திரும்ப இருப்பதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT