சினிமா

பாலியல் வழக்கு: புகாரை வாபஸ் வாங்க வற்புறுத்திய நடிகை யார்?

காமதேனு

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் நடிகர் இன்று வருவதாகக் கூறப்பட்ட நிலையில் அவர் மீண்டும் எஸ்கேப் ஆகி இருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகை ஒருவர், நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது போலீஸில் புகார் கொடுத்தார். இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்து துபாய்க்கு தப்பி ஓடிய விஜய் பாபுவை கைது செய்ய கொச்சி போலீஸார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து ஜார்ஜியா நாட்டுக்கு தப்பிச் சென்றார். அவர் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.

அவர் சொத்துகளை முடக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதனால் விஜய் பாபு சரணடைய தீர்மானித்துள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தில் விஜய் பாபுவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது.

விஜய் பாபுவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு விட்டதால் இந்தியா திரும்ப முடியவில்லை என்றும், விசாரணை அதிகாரி முன்போ, நீதிமன்றத்திலோ ஆஜராக தயாராக இருப்பதாகவும் அவருடைய வழக்கறிஞர் கூறினார். அதோடு 30-ம் தேதி இந்தியா திரும்புவதற்காக எமிரேட்ஸ் விமானத்தில் எடுத்த டிக்கெட்டையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதன்படி இன்று அவர் கொச்சி திரும்பினால் கைது செய்ய போலீஸார் தயாராக இருந்தனர். இந்நிலையில் அவர் இன்று வரவில்லை என்றும் புதன்கிழமை வருவார் என்று அவருடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே விஜய்பாபு மீதான பாலியல் வன்கொடுமை புகாரில் வலுவான ஆதாரம் கிடைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். விஜய்பாபு, துபாயில் தங்குவதற்கு பிரபல நடிகர் ஒருவர் உதவியுள்ளார். பாலியல் புகார் கொடுத்த நடிகையிடம் அதை வாபஸ் வாங்குமாறு மற்றொரு நடிகை வற்புறுத்திய தகவலும் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அந்த நடிகை யார் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.

SCROLL FOR NEXT