சினிமா

`அஜித், விஜய்யை சந்திக்கலை’: `மங்காத்தா 2’ பற்றி வெங்கட்பிரபு விளக்கம்

காமதேனு

`` ’மங்காத்தா 2’ படத்தின் கதையை இன்னும் உருவாக்கவில்லை'' என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

அஜித்குமார், அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, அஞ்சலி, ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்து கடந்த 2011-ம் ஆண்டு வெளியான படம், ‘மங்காத்தா’. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். அஜித், நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருப்பது வழக்கம்.

அஜித்குமார், வெங்கட்பிரபு, விஜய்

இந்நிலையில் ’மங்காத்தா 2’ ஆம் பாகம் படத்தை விரைவில் வெங்கட்பிரபு உருவாக்க இருப்பதாகவும் அதில் அஜித்குமார், விஜய் நடிக்க இருப்பதாகவும் இதை வெங்கட்பிரபு உறுதிப்படுத்தி இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாயின. முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை சிறப்பாக வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இதுபற்றி இப்போது விளக்கம் அளித்துள்ள வெங்கட்பிரபு, ’’கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட என்னிடம், வழக்கமாக கேட்கும் ’மங்காத்தா 2’ படம் பற்றி கேட்கப்பட்டது. அஜித், விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் ஆசை இருக்கிறது என்று பல பேட்டிகளில் சொல்லி வந்ததை சொன்னேன். ’மங்காத்தா 2’ படத்துக்கான கதையை இன்னும் உருவாக்கவில்லை. இது தொடர்பாக அஜித் மற்றும் விஜய்யை சந்தித்து பேசவில்லை. இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது, ரசிகர்களின் விருப்பம். அவர்கள் கனவை சிதைக்க விரும்பவில்லை’'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT