சினிமா

'வலிமை' படத்தை ஓடிடி-யில் வெளியிட தடையில்லை

காமதேனு

நடிகர் அஜித் நடித்த வலிமை படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதற்கு தடை தடைவிதிக்க மறுத்துவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பிரதான வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "வசதியான வாழ்கைக்காக சங்கிலி பறிப்பது, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வதுபோல காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிற மொழிகளில் `மெட்ரோ' படத்தை தயாரிக்க உள்ள நிலையில், அதே அம்சங்களுடன் `வலிமை' படமாக்கப்பட்டது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது. எனவே `வலிமை' படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

இதற்கிடையே, `வலிமை' திரைப்படம் மார்ச் 25-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அதற்கு தடை கோரி கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் ஹெச்.வினோத் தரப்பு பதில் மனுவை வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் தாக்கல் செய்தார். அதில், செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை போன்ற செய்திகளின் அடிப்படையில் உருவானதுதான் `வலிமை' படத்தின் கதை, கரு, கதாப்பாத்திரங்கள்.

மனுதாரர் குறிப்பிடும் உச்ச காட்சி அனைத்தும் வெவ்வேறானவை. `மெட்ரோ' படத்தின் கதை, கதாப்பாத்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறுவது தவறு. எந்த காப்புரிமையையும் மீறவில்லை. இணையதளங்களில் வெளியான விமர்சனங்களில் `மெட்ரோ' படத்தை ஒப்பிட்டு கூறப்படவில்லை.

எனவே, தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வழக்கு தாக்கல் செய்த ஜெயகிருஷ்ணனுக்கு எதிராக 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர உள்ளோம். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட `வலிமை' படத்தை, ஓடிடி தளங்களில் வெளியிடவும், சாட்டிலைட் உரிமை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில் தடை விதித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, `மெட்ரோ' படத் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த பதில் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வலிமை படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டிற்கு தடைவிதிக்க மறுத்து, பிரதான வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT