‘தளபதி 67’ல் நடிப்பீர்களா என்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு நடிகர் கார்த்தி பதிலளித்துள்ளார்.
சென்னையில் நேற்று ‘சர்தார்’ படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில் பேசிய நடிகர் கார்த்தி, ‘இந்தப் படத்தின் வெற்றி எனக்கு மகிழ்ச்சியை விட நிம்மதியே அதிகம் கொடுத்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இதை உணர்ந்தேன். இப்போது ‘சர்தார்’ படத்திலும் உணர்கிறேன். நாம் நம்புவதை அப்படியேத் திரைக்குக் கொண்டு வந்து, அதை பார்வையாளர்களும் ஏற்றுக் கொள்ள வைப்பது கடினம். அது பிடித்தபடி நடந்திருக்கிறது என்ற மகிழ்ச்சிதான் அது.
இந்தக் கதையைச் சொல்லி ஒருவரை நடிக்க சம்மதிக்க வைப்பது கடினம். அப்படியே இருந்தாலும் படமாக எடுப்பதும் கடினம். ஆனால், அதை ‘சர்தார்’ படக்குழு சாத்தியப்படுத்தி இருக்கிறது. இந்தக் கதாபாத்திரம் நடிக்க மனதில் நாட்டைப் பற்றிய பெருமையும் இருக்க வேண்டும். ஒவ்வொரு கெட்டப் போடும் போதும் அவ்வளவு எரியும். ஆனால், எனக்கு முன்பு பலர் இதைக் கடந்து வந்திருக்கிறார்கள் எனச் சொல்லி சமாதானப்படுத்திக் கொள்வேன்’ என்றார்.
மேலும், அடுத்து லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் ‘தளபதி 67’-ல் விஜய்யுடன் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கார்த்தி, ‘அதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ’தளபதி 67’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் என்பது வேறு. ‘கைதி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் என்பது வேறு. அதனால், எந்த அளவிற்கு இது சாத்தியப்படும் எனத் தெரியவில்லை’ என்றார்.