மனோபாலா
மனோபாலா 'மனோபாலாவின் உடல்நலக் குறைவுக்குக் காரணம் இதுதான்': பூச்சி முருகன்!
சினிமா

'மனோபாலாவின் உடல்நலக் குறைவுக்குக் காரணம் இதுதான்': பூச்சி முருகன்!

காமதேனு

நடிகரும், இயக்குநருமான மனோபாலா மறைவுக்கு தமிழக வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: மனோபாலா, எப்படி உங்கள் இழப்பை ஈடு செய்வேன் என்று தெரியவில்லை. மனோபாலாவுடன் பழகியது பள்ளி, கல்லூரி நட்பை போல மிகவும் நெருக்கமானது. அவரைப் போல விரைவில் உயரத்தை தொட்டவரும் இல்லை, விழுந்தவரும் இல்லை. விழுந்தவர் மீண்டும் மீண்டும் போராடி மீண்டு எழுந்து வந்திருக்கிறார்.

படவெளியீட்டில் நிலவிய சிக்கல், அதில் முடங்கிய கோடிகள் கூட மனோபாலாவை முடக்கவில்லை. சங்க செயற்பாடுகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அத்தனை ஈடுபாடு காட்டியவர். அவரை பொறுத்தவரை எது நடந்தாலும் இயங்கிக் கொண்டே இருக்கவேண்டும். முடங்கி விடக்கூடாது. அந்த போராட்ட குணத்தை பார்த்து வியந்து இருக்கிறேன்.

அந்த வகையில் அவர் ஒரு போராளி தான்.  சில மாதங்களுக்கு முன்பு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக்கொண்டபோது அத்தனை நம்பிக்கையாக அதனை எதிர்கொண்டவர் இந்த முறை கணையம் பாதிக்கப்பட்டபோது நலிவடைந்து விட்டார். நல்ல நண்பன் என்றும் சொல்லலாம். மூத்த சகோதரன் என்றும் சொல்லலாம்.  உறுதுணையாக இருந்த அவரது இடத்தில் ஆள் இல்லாமல் தவிக்கிறேன்.

தயவுசெய்து உணவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று பல முறை கெஞ்சி இருக்கிறேன், திட்டி இருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு இட்லி, அரை கப் தயிர் சாதம் என்று சுருக்கிக் கொண்டே வந்தார். அதுவே இந்த உடல்நலக் குறைவுக்கு காரணமாகி விட்டது. கடைசியாக சந்தித்தபோது விரைவில் மீண்டு வாருங்கள். நிறைய வேலைகள் இருக்கிறது என்றேன். கை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டினார். வார்த்தை தவறி விட்டீர்களே மனோபாலா! என்னை நானே எப்படி தேற்றிக் கொள்வது?’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT