சினிமா

`எந்த ஆதாரங்களும் இல்லை'- நடிகர் சூர்யா மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

காமதேனு

ஜெய்பீம் படம் தொடர்பாக நடிகர் சூர்யா ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதில், "நடிகர் சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தில், இந்து வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில், அவர்களை இழிவுபடுத்தியும், பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அவர்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும், மகாலட்சுமியையும், அவர்கள் வணங்கும் குருவின் பெயரை இழிவுபடுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ல் அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி காவல்துறையினர், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளதாகவும், வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT