சினிமா

விஜய்க்கு கதை சொன்ன 'கோமாளி’ இயக்குநர்!

காமதேனு

நடிகர் விஜய்க்கு கதை சொன்னதாக ‘கோமாளி’ பட இயக்குநர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

’ஜெயம்’ ரவி, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரது நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியானத் திரைப்படம் ‘கோமாளி’. இயக்குநராக பிரதீப் ரங்கநாதனுக்கு இதுதான் அறிமுகப் படம். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தை அடுத்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கி நடித்துள்ளார்.

நவம்பர் 4-ம் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தப் படம் குறித்து பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், ‘லவ் டுடே’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய்க்கு கதை சொல்ல இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு முன்பே ஒருமுறை நடிகர் விஜய்க்கு கதை சொல்லி இருந்ததாகவும், அது விஜய்க்கு பிடித்திருந்ததாகவும் கூறியிருக்கும் பிரதீப், வருங்காலத்தில் நிச்சயம் அவருடன் இணைந்து வேலைப் பார்க்கும் வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் பிஸியாக உள்ளார். இதனை அடுத்து தனது 67-வது படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைய இருக்கிறார். இதற்கடுத்து மீண்டும் அட்லியுடன் இணைவார் எனவும் சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT