சினிமா

`வலிமை' படம் ஓடிய தியேட்டரில் குண்டுவீசிய வாலிபர் கைது: 6 மாதத்துக்கு பிறகு சிக்கினார்

காமதேனு

அஜித் நடிப்பில் வெளியான `வலிமை' படத்தின் போது ஏற்பட்ட தகராறில் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 6 மாதங்களுக்கு பிறகு சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. அஜித் ரசிகர்களுக்காக அனைத்து தியேட்டர்களில் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இதேபோல் கோயம்புத்தூர் காந்தி நகரில் உள்ள கங்கா, யமுனா, காவேரி தியேட்டர்களிலும் வலிமை படத்தின் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. அப்போது தியேட்டருக்கு படம் பார்க்க வந்த சிலர் அங்கு பைக்கில் வீலிங் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர். அங்கு கூடியிருந்த அஜித் ரசிகர் அவர்களை தட்டிக்கேட்ட போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த பைக் வீலிங் கும்பல் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டை வீசியதில் இருவர் காயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காட்டூர் காவல்துறையின் பெட்ரோல் குண்டு வீசி கலவரத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததோடு, தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் தேடிவந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளி சிவா (21) சென்னை வடபழனியில் பதுங்கி இருப்பதாக கோவை மாவட்ட காட்டூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் இன்று சென்னை விரைந்து வந்து வடபழனி காவல்துறையினரின் உதவியுடன் வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்த சிவாவை கைது செய்தனர். பின்னர் அவரை ரயில் மூலம் காவல்துறையினர் கோவைக்கு அழைத்து சென்றனர்.

SCROLL FOR NEXT