சினிமா

திருமணத்துக்கு வராத அம்மாவிடம் ஆசி: கேரளா சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி

காமதேனு

திருமணத்துக்குப் பின்னர் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் இன்று கேரளா சென்றுள்ளனர்.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. அதுபற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது.

இந்நிலையில், இவர்கள் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் கடந்த 9-ம் தேதி கோலாகலமாக நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான், இயக்குநர்கள் மணிரத்னம், அட்லீ, தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி உட்பட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கொச்சி விமான நிலையத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

இந்நிலையில், புதுமணத் தம்பதிகள் இன்று கேரளா சென்றுள்ளனர். கொச்சி விமான நிலையத்துக்கு வந்த அவர்களிடம் ஊடகத்தினர் பேச முயன்றனர். அவர்கள் பதில் சொல்லாமல் சென்றுவிட்டனர்.

இந்தத் திருமணத்திற்கு நயன்தாராவின் தாயார் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அவரிடம் ஆசி பெறுவதற்காக இருவரும் சென்றுள்ளனர் என்றும் இன்னும் சில நாட்கள் அவர்கள் கேரளாவில் இருப்பார்கள் என்றும் சென்னையில் ஊடகத்தினரைச் சந்தித்து நன்றி தெரிவித்தது போல, கேரள ஊடகங்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT