'ஜவான்' படத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகை நயன்தாராவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சென்னையில் சந்தித்து பேசினார். முன்னதாக நயன்தாரா தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் நடிகர் ஷாரூக்கானை சூழ்ந்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
'பதான்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜவான்'. அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 'ஜவான்' பட ஷூட்டிங்கும் படுஜோராக நடைபெற்று வருகிறது.
'பதான்' படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள மும்பையில் இருந்து ஷாருக்கான் சென்னை நேற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் உள்ள நடிகை நயன் தாரா இல்லத்திற்கு நடிகர் ஷாருக்கான் சென்றுள்ளார். ஷாருக்கான் வருவதை அறிந்த குடியிருப்புவாசிகள் அவருடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நயன்தாராவை சந்தித்த ஷாருக்கான் அவரிடம் பேசிவிட்டு கிளம்பியுள்ளார். நடிகர் ஷாருக்கானை நயன்தாரா அவரது கார் வரை வந்து வழியனுப்பி வைத்துள்ளார். விக்னேஷ் சிவன் விரைவில் பாலிவுட்டில் படம் இயக்க உள்ளதாக தகவல் கசிந்து வரும் நிலையில் ஷாருக்- நயன் சந்திப்பு அதனை உறுதிப்படுத்தியுள்ளது.