சினிமா

சந்தானம் நடிப்பில் தமிழ், கன்னடத்தில் உருவாகும் பட ஷூட்டிங் நிறைவு

காமதேனு

சந்தானம் நடிப்பில் தமிழ், கன்னடத்தில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

காமெடி நடிகர் சந்தானம் இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வந்தார். இது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் 15-வது படம். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் தொடங்கியது. இந்தப் படத்தில் சந்தானம் ஜோடியாக, தன்யா ஹோப் நடிக்கிறார்.

இவர் அருண் விஜய் ஜோடியாக `தடம்', ஜீவா, மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் `கோல்மால்' படங்களில் நடித்திருந்தார். நடிகை ராகிணி திவேதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் கிளாமர் வேடத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். பாக்யராஜ், செந்தில், கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஃபார்ச்சூன் பிலிம்ஸ் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், கன்னட மொழிகளில் உருவாகிறது. படத்துக்கு அர்ஜுன் ஜன்யா இசை அமைக்கிறார். இது சந்தானம் பாணியில் அமையும் காமெடி படம் என்று படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக்கும் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT