நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்களுக்கு நடிகை தீபிகா படுகோனே பதில் அளித்துள்ளது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
வித்தியாசமான உடைகளுக்கும் அவரது எனர்ஜியான பேச்சுக்கும் பெயர் பெற்றவர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ரன்வீர் சிங். இவர் வித்தியாசமான உடைகளில் நடத்தும் ஃபோட்டோஷூட்களும் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ‘Nude Photography’ எனப்படும் நிர்வாண ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அமெரிக்க பாப் கலாச்சாரத்தின் அடையாளமும் நடிகருமான பர்ட் ரெனால்ட்ஸ்க்கு இந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பதாக ரன்வீர் தெரிவித்திருந்தார்.
ஒரு பக்கம் அவரது ரசிகர்களிடையே இந்த புகைப்படங்கள் வரவேற்பை பெற்ற அதே சமயம் சர்ச்சைகளும் கிளம்பியது. இந்த புகைப்படங்கள் குறித்து, நடிகையும் எம்பியுமான மிமி, ‘ரன்வீரின் இந்த புகைப்படங்கள் கவர்ச்சியாக இருக்கின்றன என பாராட்டப்படுகிறது. இதுவே ஒரு பெண் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தால் அவள் வீட்டை கொளுத்துவேன், கொல்லுவேன் என அவளது நடத்தை பற்றியும் தவறாக பேசி இருப்பார்கள்’ என கூறினார். மேலும் வேறு சிலர், இது போன்ற புகைப்படங்களை எடுக்க ரன்வீரின் மனைவியும் நடிகையுமான தீபிகா எப்படி அனுமதித்தார் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த புகைப்படங்களை பார்த்து தீபிகா என்ன கூறியிருக்கிறார் என்பது பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ’உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த புகைப்பட கான்செப்டில் ஆரம்பத்தில் இருந்தே தீபிகா ஈர்க்கப்பட்டு இருந்தார். புகைப்பட ஷூட்டிலும் ஆர்வம் காட்டி வந்தார். இந்த கான்செப்ட்டும் அவருக்கு பிடித்தே இருந்தது. புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும் முன்னரே அவர் இந்த புகைப்படங்களை பார்த்தார். தீபிகா எப்போதும் ரன்வீரை ஆதரித்து அவரது மிகப்பெரிய சாம்பியனாக இருந்து வருகிறார். அதனால், ரன்வீர் எப்போதும் வித்தியாசமாக எதையாவது முயற்சித்து பார்க்க வேண்டும் என்று விரும்பினால் அதை அனுமதிக்க தீபிகா தயங்கியதே இல்லை’ என்று கூறப்படுகிறது.
மேலும் ரன்வீரும் இந்த புகைப்படங்கள் பற்றிய கேள்விக்கு பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘நான் உடல் ரீதியாக நிர்வாணமாக இருப்பது என்பது எளிதானது. என்னுடைய ஆன்மாவும் நிர்வாணமானது தான். எல்லாருடையதும் அப்படிதான் இருக்கும் என்பது உண்மையே. நான் ஆயிரம் பேருக்கு முன்னால் நிர்வாணமாக இருக்கவும் தயங்க மாட்டேன். ஆனால், எனக்கு முன்னால் இருப்பவர்கள் அசெளகரியம் அடைகிறார்கள் என்பது தான் உண்மை’ என பேசியுள்ளார்.