சினிமா

`அந்த அதிர்ஷ்டம் இன்னும் அமையவில்லை'- ரஜினி, கமலை இயக்க விரும்பும் 'பிரேமம்' இயக்குநர்!

ஆதிரா

நடிகர்கள் ரஜினி, கமலை இணைத்து படம் இயக்க விருப்பமுள்ளதாக 'பிரேமம்' பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

கடந்த 2015-ல் சாய் பல்லவி- நிவின் பாலி நடிப்பில் பிரேமம் திரைப்படம் வெளியாகி மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெற்றி அடைந்தது. தற்போது தன்னுடைய சமூக வலைதளத்தில் நடிகர்கள் ரஜினி, கமலை வைத்து படம் இயக்க விருப்பம் உள்ளதாக கூறி இருக்கிறார். அந்த பதிவில், 'ரஜினி சார் அல்லது கமல் சாரை நான் தனியாக சந்தித்தால் அவர்கள் இணைந்து நடிக்கும் படியான கதைக்களம் ஒன்றை வைத்திருக்கிறேன். கதை கேட்டால் நிச்சயம் அவர்களுக்கு பிடிக்க கூடும். ஆனால், அந்த அதிர்ஷ்டம் எனக்கு இன்னும் அமையவில்லை. அதனால், இன்னும் அவர்களை என் வாழ்க்கையில் இன்றைய தேதி வரை சந்திக்காமல் இருக்கிறேன்.

இனி வரும் காலத்தில் ஒருவேளை அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமைந்து அவர்களுக்கும் என் கதை பிடித்துவிட்டது என்றால் என்னுடைய எல்லா திறமைகளையும் நான் உபயோகித்து நல்லதொரு பொழுதுபோக்கு படமாக அமைய என் குழுவுடன் கடினமாக உழைப்பேன். நிச்சயம் அந்த திரைப்படம் ரஜினி, கமல் இருவருக்கு மட்டுமல்ல அவருடைய ரசிகர்களுக்கும் மிக பிடித்த ஒன்றாக அமையும்" என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்க்காக ஒரு கதை அல்போன்ஸ் தெரிவித்ததாகவும் விஜய்க்கு அந்த கதை பிடித்து சஞ்சய் அதில் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்ததாகவும், ஆனால் சஞ்சய் அப்போது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்ததால் அவரை கட்டாயப்படுத்தவில்லை எனவும் விஜய் 'பீஸ்ட்' படத்திற்காக தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT