சினிமா

வாக்குச்சாவடியில் அதிகாரியைத் தாக்கிய வழக்கு: 26 ஆண்டுகளுக்குப் பின் பிரபல நடிகருக்கு 2 ஆண்டு சிறை

காமதேனு

அதிகாரியைத் தாக்கியதாக 26 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், பிரபல நடிகருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பிரபல இந்தி நடிகர் ராஜ் பாப்பர் (70). உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த அவர், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர். மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் இருந்துள்ள இவர், கடந்த 1996-ம் ஆண்டு உ.பியில் நடந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டார்.

அப்போது வாக்குச்சாவடி ஒன்றில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா சிங் ராணா என்ற அதிகாரியை தாக்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 26 ஆண்டுகளாக லக்னோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், எம்.பி., எம்எல்ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ராஜ் பாப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.8,500 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்டபோது ராஜ் பாப்பர் நீதிமன்றத்தில் இருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராஜ் பாப்பர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT