அமிதாப், பிரபாஸ்
அமிதாப், பிரபாஸ் 
சினிமா

‘உங்க பெருந்தன்மைக்கு அளவே இல்லை’: பிரபாஸை புகழும் அமிதாப் !

காமதேனு

“உங்கள் பெரும் தன்மைக்கு அளவே இல்லை” என்று நடிகர் பிரபாஸை, நடிகர் அமிதாப் பச்சன் பாராட்டியுள்ளார்.

நடிகர் பிரபாஸ் தற்போது ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 11-ம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்து, ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து, ‘சலார்’, நாக் அஸ்வின் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

நாக் அஸ்வின் இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பிரபாஸுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உட்பட பலர் நடிக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாகும் இது, சயின்ஸ் பிக் ஷன் கதையைக் கொண்டது என்று கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுடன் நடிப்பதை, தனது கனவு நனவாகிவிட்டதாகக் கூறியிருந்தார் நடிகர் பிரபாஸ்.

பிரபாஸ், அமிதாப் பச்சன்

இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன், பிரபாஸின் விருந்தோம்பலை ட்விட்டரில் பாராட்டி உள்ளார். “பாகுபலி பிரபாஸ், உங்கள் பெருந்தன்மைக்கு அளவே இல்லை. எனக்கு வீட்டில் சமைத்த, சுவையான உணவுகளைக் கொண்டு வருகிறீர்கள். எனக்குத் தேவையான அளவைத் தாண்டி அனுப்புகிறீர்கள். அதைக் கொண்டு ஒரு ராணுவத்துக்கே உணவளித்திருக்கலாம். உங்கள் பாராட்டுகள்தான் ஜீரணிக்க முடியாதவையாக இருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பிரபாஸ், உடன் நடிக்கும் நடிகர்களுக்கு தனது வீட்டில் சமைத்த உணவுகளை வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

SCROLL FOR NEXT