சினிமா

உலகம் முழுவதும் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த `பொன்னியின் செல்வன்!’

காமதேனு

பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வசூல் பற்றிப் படக்குழு அறிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். நடிகர்கள் கார்த்தி, த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ‘ஜெயம்’ ரவி உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருந்தனர். படத்திற்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படம் வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பெரு நகரங்களில் உள்ள பல தியேட்டர்களில் டிக்கெட்கள் இல்லை என செய்திகள் வெளியானது.

அப்படி இருக்கையில் படம் வெளியாகி முதல் நாளிலேயே 80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 140 நாட்களில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்குநர் மணிரத்னம் படமாக்கியுள்ளார். இதில் முதல் நாளிலேயே 80 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது படம்.

வார இறுதி மற்றும் பூஜை விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வருவதால் இன்னும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் படக்குழு இந்தச் செய்தியை உற்சாகமாக வெளியிட்டுள்ளது. முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 27 கோடிக்கும் அதிகமாக வசூலை பெற்றுள்ளது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம்.

இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் முதல் நாளிலேயே அதிக வசூலைப் பெற்றத் திரைப்படங்களின் பட்டியலில் ‘வலிமை’, ‘பீஸ்ட்’ திரைப்படங்கள் இருக்க மூன்றாவது இடத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT