சினிமா

’என் கதையைத் திருடிட்டாங்க’ - ஸ்ருதி ஹாசன் படத் தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் புகார்

காமதேனு

தனது கதையைத் திருடி படமாக எடுத்துவிட்டதாகக் கூறி, ஸ்ருதி ஹாசன் நடித்த படத்தின் தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

ரவி தேஜா, ஸ்ருதி ஹாசன், சமுத்திரக்கனி, வரலட்சுமி சரத்குமார் உட்பட பலர் நடித்த தெலுங்கு படம், ’கிராக்’. கோபிசந்த் மலினேனி இயக்கிய இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படம், தனது நாவலை காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி, ஹைதராபாத்தை சேர்ந்த சிவசுப்ரமணிய மூர்த்தி என்ற எழுத்தாளர் ஜுப்ளி ஹில்ஸ் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

தயாரிப்பாளர் தாகூர் மது மீது அளித்துள்ள புகாரில், தனது அனுமதி இல்லாமல் நாவலை காப்பியடித்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர் என்று கூறியுள்ளார். புகாரை உறுதிப்படுத்தியுள்ள போலீஸார், இதுபற்றி விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

பட வெளியீட்டின்போது ரவி தேஜா அளித்த பேட்டியில், இந்தப் படத்தின் கதை சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT