சினிமா

புடவை பரிசு; புதுப்படப் பெயர் அறிவிப்பு: பரபர பார்த்திபன்

காமதேனு

நடிகர் பார்த்திபன் தான் இயக்கி, நடிக்கும் அடுத்தப் படத்தின் பெயரை அறிவித்துள்ளார். இயக்குனருமான பார்த்திபன் இது தொடர்பாக சமூகவலைதளத்தில் தன்னைப் பின்தொடர்வோருக்கு ஒரு சுவாரஸ்யப் போட்டியும் நடத்தியிருந்தார்.

ஒத்த செருப்பு, இரவின் நிழல் படங்களைத் தொடர்ந்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அடுத்தப் படத்தை இயக்க உள்ளார். இதற்காக தன் சமூகவலைதளப் பக்கங்களில் ஒரு புத்தகத்தின் நடுவே மயிலிறகு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தலைப்பை சரியாகக் கண்டுபிடிப்பவர்களுக்கு புடவை பரிசளிக்கப்படும் என அறிவித்து இருந்தார். நேற்று முழுவதும் ரசிகர்கள் இதற்கு தங்கள் மனதில் தோன்றிய பெயரை பதிவாக இட்டுவந்தனர்.

இந்நிலையில் இன்று நடிகர் பார்த்திபன், அந்தத் தலைப்பினை ’52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என அறிவித்துள்ளார். மேலும் சரியாகச் சொன்னவர்களுக்கு புடவை பரிசும் வழங்க உள்ளார். கூடவே தனக்கே உரிய ஸ்டைலில் ’புடவையை நீங்கள் கட்டுங்கள். ஆணாக இருந்தால் நீங்கள் கட்டிக்கொண்டவர்களுக்கு கொடுங்கள். திருமணம் இன்னும் ஆகாதவர்கள் கட்டிக்கப் போகிறவர்களுக்கு கொடுங்கள்’ எனவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சமூகவலைதளங்களில் பார்த்திபனின் புதிய படத்தின் பெயர் வைரல் ஆகிவருகிறது.

SCROLL FOR NEXT