சினிமா

காவல் துறையிடம் சிக்கிய நடிகர் நாக சைதன்யா: என்ன காரணம்?

காமதேனு

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, மீண்டும் ஒரு ஹீரோவுக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.

ஹைதராபாத் போக்குவரத்து போலீஸார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதிகளை மீறி கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டு உள்ள கருப்பு பிலிம்களை நீக்கி வருகிறார்கள். நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வாகனங்களும் இந்த சோதனையில் இருந்து தப்புவது இல்லை.

சமீபத்தில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கார், வாகன சோதனையில் சிக்கியது. அவருக்கு ரூ.700 அபராதம் விதித்த போலீஸார், கருப்பு பிலிம்களை அகற்றினர். பின்னர் நடிகர் மனோஜ் மன்சு, இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோர் கார்களும் வாகன சோதனையில் சிக்கின. அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா காரும் இந்த அபராதத்தில் சிக்கியுள்ளது. ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் சோதனை சாவடியில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்த போலீஸார், நாக சைதன்யாவின் காரை மறித்தனர். அவருக்கும் ரூ.700 அபராதம் விதித்தனர். கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு பிலிமை தானே நீக்கிவிடுவதாக அவர் கூறியதை அடுத்து அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT