'நாகினி' டெலிவிஷன் தொடர் மூலம் பிரபலமான நடிகை மெளனி ராய் திருமணம் வரும் 27-ம் தேதி கோவாவில் நடைபெறுகிறது.
பிரபல இந்தி நடிகை மெளனி ராய். சின்னத்திரையிலும் நடித்து வந்த இவர், ’நாகினி’ தொடரில் ஷிவானியாக நடித்ததன் முலம் அதிக பிரபலமானார். இந்த தொடர் தமிழ் உள்பட பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானதால், இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக, இளைஞர்கள் அதிகம் விரும்பி இந்த சீரியலை பார்த்ததற்கு மெளனி ராயும் காரணம் என்பார்கள்.
இவரும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியாரும் காதலித்து வந்தனர். காதலை சில வருடங்களுக்கு முன் மௌனி ராயே அறிவித்தார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். துபாய் அல்லது இத்தாலியில் திருமணம் நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், வரும் 27-ம் தேதி கோவாவில் இவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது.
இதற்காக, அங்கு ஐந்து நட்சத்திர ரிசார்ட்ஸ் ஒன்று புக் செய்யப்பட்டுள்ளது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திருமணம் நடைபெற இருக்கிறது. கரண் ஜோஹர், மணீஷ் மல்கோத்ரா, அக்ஷா கரோடியா உட்பட பலர் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணக்களை வாழ்த்த இருக்கிறார்கள்.