சினிமா

’மூக்குத்திப்பூ மேலே காத்து உக்காந்து பேசுது..’ -திக்கெங்கும் இசைத்த ’மெளனகீதங்கள்’!

வி.ராம்ஜி

கதை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; கதை என்கிற ஒன்று இல்லாமல் கூட படம் பண்ணலாம். ஆனால், கதையைச் சொல்லுகிற விதம்தான் மிக முக்கியம். ‘’காலைல டூவிலர்ல வந்துக்கிட்டிருக்கும் போது என்னாச்சு தெரியுமா?’’ என்று நடந்த சம்பவத்தை ஒரு கதை போல் சொல்லி, நம் கண் முன்னே அந்தக் காட்சியை அப்படியே கொண்டுவந்து நிறுத்துகிறவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். சினிமாவிலும் கதை சொல்லுதல் என்பது மிக மிக அவசியமானதும் முக்கியமானதும் கூட!

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில், அந்தக் கதைக்குள் நம்மை ஒன்றச் செய்துவிடவேண்டும். ஏனிப்படி? எதனால் இவ்விதம்? என்றெல்லாம் நமக்குள் கேள்விகளை உசுப்பிவிட்டு, கதையின் பின்னே, நாம் பயணிக்கவேண்டும். அப்படியொரு நறுவிசான, நூல்கோத்த திரைக்கதை அமைத்துவிட்டால், நமக்குத் தெரிந்த ‘பாட்டி வடை சுட்ட கதை’ கூட புதிதாகத் தெரியும். புதுமையாக உணருவோம். ஆச்சரியத்துடன் அந்தத் திரைக்கதையை வியப்போம். அந்தக் கதாசிரியரை காலத்துக்கும் கொண்டாடிக்கொண்டே இருப்போம்.

தமிழ் சினிமாவில், அப்படியொரு ‘கதைசொல்லி’தான் இயக்குநர் கே.பாக்யராஜ். கதை சொல்வதில் மன்னனென்றால்... திரைக்கதை அமைப்பதில் மன்னாதிமன்னன் பாக்யராஜ்! அவரின் திரையுலக வாழ்வில், முதல் வெள்ளி விழாப் படமாக அமைந்ததுதான் ‘மெளன கீதங்கள்.’

1979ம் ஆண்டு ’சுவரில்லாத சித்திரங்கள்’ எனும் முதல் படத்தை இயக்கினார். எல்லோராலும் பாராட்டப்பட்ட, வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருந்தது இந்தப் படம். 1980ம் ஆண்டு ’ஒரு கை ஓசை’ படத்தை இயக்கினார். முதல் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்தவர், இந்தப் படத்தில் நாயகனாகவே நடித்தார். 1981ம் ஆண்டு மூன்றாவது படமாக, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிற படமாக வெளியானதுதான் ‘மெளன கீதங்கள்.’

’புதிய வார்ப்புகள்’ மூலமாகவும் ‘கன்னிப்பருவத்திலே’ மூலமாகவும் ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘ஒரு கை ஓசை’ என்றெல்லாம் தெரிந்திருந்தாலும் ‘’யாருய்யா இந்த பாக்யராஜ்?’’ என்று மொத்தத் தமிழகமும் வியந்து கொண்டாடியது ‘மெளன கீதங்கள்’ படத்திலிருந்துதான்!

’புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜ்தான் நாயகன். ஆனால் கங்கை அமரன் குரல் கொடுத்தார். ’சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் இரண்டாவது ஹீரோ. ’ஒரு கை ஓசை’யில் வாய்பேச முடியாதவர். ஆக, முழுமையான ஹீரோவாக, அவரே... அவர் குரலில்... அவருக்கே உண்டான ஸ்டைல்களுடனும் முத்திரைகளுடனும் கொடுத்ததுதான் ‘மெளன கீதங்கள்.’

பாக்யராஜின் மைனஸ் பாயிண்ட் என்று இரண்டைச் சொல்வார்கள். ஒன்று மூக்குக்கண்ணாடி. இன்னொன்று... அவரின் கீச்சுக் குரல். தமிழ் சினிமா வரலாற்றில், மூக்குக்கண்ணாடி ஹீரோவாகவும் ஒளிர்ந்தார். கீச்சுக் குரல் நாயகனாகவும் பேசப்பட்டார். இது ரெண்டுமே மிகப்பெரிய சாதனையாகவும் பாக்யராஜின் தனி அடையாளமாகவுமே ஆகிப்போனது. தன் பலஹீனங்களையே பலமாக்கிக் கொள்கிற சூட்சுமமும் சாமர்த்தியமும் கொண்ட பாக்யராஜ், இந்தப் படத்தின் மூலம் அடைந்த வெற்றியில் இருக்கிறது அவரின் தனித்திறமை!

இன்னொரு விஷயம்... வாரப் பத்திரிகை ஒன்றில், தொடர்கதை போல இந்தப் படத்தின் புகைப்படங்களை வெளியிடப்பட்டு, கதை முழுவதுமே சொல்லப்பட்டதும், அப்போது புதுமையாகப் பேசப்பட்டது. மேலும் படத்தின் கதை, காட்சிகள், வசனங்கள் எல்லாம் படம் வருவதற்கு முன்னமே வாசகர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் அவையெல்லாம், பாக்யராஜின் திரைக்கதை ஜாலத்தில் திரையில் புதிதாக இருந்தன. ‘புதிதாகப் படத்தைப் பார்க்கிறோம். இந்தக் கதை என்ன என்பதே எங்களுக்குத் தெரியாது’ எனும் உணர்வுடன் அவர்களை பிரமிக்க வைத்ததுதான் பாக்யராஜின் மேஜிக்!

படத்தின் டைட்டிலில் இருந்தே பாக்யராஜின் குசும்பு தொடங்கிவிடும். கோவையில் இருந்து கம்பீரமாக காரில் சென்னைக்கு வருவார் பகவதி கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் கே.கோபிநாதன். இவர்தான் படத்தின் தயாரிப்பாளர். படத்தின் டைரக்டரான பாக்யராஜ், ஹீரோயின் தொடங்கி படத்தின் அத்தனை டெக்னீஷியன்களையும் அறிமுகப்படுத்தி வைப்பார். டைட்டில் ஆரம்பமாகும். காரில் வந்த தயாரிப்பாளர், பிறகு டாக்ஸியில் வருவார். அடுத்து ஆட்டோவில் வருவார். பிறகு நடந்து வருவார் தயாரிப்பாளர். இப்படித்தான் ‘மெளன கீதங்கள்’ படத்தின் டைட்டில் இருக்கும். ஆனால் இப்படியான காட்சிகளுக்கு நேர்மாறாக, தியேட்டர்கள் அனைத்திலும் படம் பார்க்க உள்ளே சென்றவர்களைவிட, ’ஹவுஸ்ஃபுல்’ போர்டு பார்த்துவிட்டு வெளியேறியவர்கள்தான் அதிகம்.

மூன்றாவது மாடியில் இருக்கும் பெண்ணின் கூந்தல், தரைக்கு வருவதும் அந்தக் கூந்தலை நடுமாடியில் இருந்தபடி ஒருவர் கத்தரிக்கோலால் வெட்டுவதும், அப்போது எடிட்டிங் என்று டைட்டில் போடுவதும் ரசனையும் ரகளையுமானவை!

இளையராஜா இசைக்கான மெட்டுகளைப் எழுதிக் கொண்டிருப்பார். பின்னணியில் ’மாமன் ஒரு நா மல்லிகைப்பூ கொடுத்தான்’ என்ற டியூன் இசைத்துக்கொண்டிருக்கும். இளையராஜா எழுதிக் குவித்திருக்கும் மெட்டுக்கள் கொண்ட பேப்பர்களில் இருந்து சிலவற்றை நைஸாக கங்கைஅமரன் எடுத்துக் கொண்டு திரும்புவார். ‘இசை கங்கை அமரன்’ என்று டைட்டில் போடுவார் பாக்யராஜ்!

’மெளனகீதங்கள் படம் பாக்கபோறியா. டிக்கெட் கிடைக்காது சீக்கிரமே போயிரு. முக்கியமா, டைட்டிலைப் பாக்க மறந்துடாதே. செம காமெடி போ’ என்று சொன்னவர்கள் ஏராளம். டைட்டிலையே காமெடியாகச் சொல்லமுடியும் என நிரூபித்தார்.

கோயம்புத்தூர். மகனுடன் பஸ் ஏறுகிறார் சரிதா. படம் பார்ப்பவர்களுக்கு ஷாக். ’என்னடா இது சரிதாதான் ஹீரோயின். அதுவும் பையனோட வர்றாரு. அப்படீன்னா ஹீரோ எங்கே?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பெட்டிபடுக்கை சகிதமாக, அதே பஸ்சில் ஏறுவார் பாக்யராஜ். இன்னும் குழம்பினார்கள் ரசிகர்கள். ‘ஹீரோ தனியா ஏறுறாரு. ஹீரோயின் மகனோட ஏறுறாங்க. அப்படீன்னா அந்த மகனுக்கு அப்பா யாரு? இவங்களுக்குள்ளே இனிமேதான் உறவு பூக்குமா?’ என்றெல்லாம் தனியே கதையை எழுதத் தொடங்கினார்கள் ரசிகர்கள். ‘இதுதான் இதுதான் இதுதான்...’ என்று காட்சிகளை அடுக்கிக் கொண்டே பாக்யராஜ் செல்ல, மொத்தக் கூட்டமும் விழிகள் விரியப் படம் பார்த்து ரசித்து பிரமித்தது!

அதன் பிறகு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்குப் பயணமாகும் பஸ். ஆனால், கதை பின்னோக்கிப் பயணிக்கும். ஒற்றைவரியில் பின்னோக்கிப் பயணிக்கும் என்று சாதாரணமாகச் சொல்லிவிடலாம். அங்கே, ஆங்காங்கே ஜிம்மிக்ஸ் வித்தை, திரைக்கதையில் சிக்கிக்கொண்ட நூல் முடிச்சுக்களை அவிழ்த்து அசத்திக் கொண்டே இருப்பார் பாக்யராஜ்.

பேருந்தில், இருவரும் பார்த்துக்கொண்டதும் ’ஒருபெண்ணுடன் இருக்கிற பாக்யராஜ், அடுத்து சரிதாவுடன் டூயட் பாடுகிற பாக்யராஜ், குடித்தனம் நடத்துகிற காட்சி என பரபரவென, தடதடவென வந்து போகும். ‘ஓ... இவர்கள் பிரிந்ததற்கு அந்தப் பெண் காரணம்’ என்பதை நமக்குச் சொல்லிவிட்டுத்தான் கதையை அடுத்துத் தொடருவார். இதற்கும் ஒரு துணிச்சலும், தன்னம்பிக்கையும் அவசியம் வேண்டும்; அதுதான் பாக்யராஜ் பாணி!

இன்டர்வியூ. பாக்யராஜ், சரிதா இருவருமே வேலைக்காக வந்திருப்பார்கள். அங்கே பாக்யராஜிடம் ஒரு பொய் சொல்லுவார் சரிதா. அதனால் சரிதாவுக்கு வேலை கிடைத்துவிடும். பிறகு சரிதாவின் சிபாரிசால் பாக்யராஜுக்கு வேலை கிடைப்பது போல் ஒரு சூழலை உருவாக்குவார் சரிதா. இந்தக் காட்சிகளெல்லாம் காமெடி அலப்பறைகள். சரிதா சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பி, கடனையெல்லாம் வாங்கி, கேட்டதெல்லாம் வாங்கித் தரும் பாக்யராஜ், ஒருகட்டத்தில், சரிதாவுக்கு வேலை கிடைத்த அதே அலுவலகத்தில், மேலதிகாரியாக வரும்போதுதான் அவருக்கு உண்மை தெரியவரும்.

‘உங்க பாட்டிக்கு பகவத்கீதை. உன் தங்கச்சிக்கு ஸ்கிப்பிங் ரோப்பு. உன் தம்பிக்கு கிரிக்கெட் பேட்டு. எங்க அப்பன் என்ன நோட்டு அடிக்கிறான்னு நெனைச்சியா?’ எனும் வசனம் மிகப்பிரபலம். இந்த வசனத்தை எண்பதுகளில் சொல்லாதவர்களே இல்லை. அதன் பின்னே மலருகிற காதல், கல்யாணத்தில் முடியும். அங்கிருந்து தொடங்கும் தாம்பத்ய வாழ்வில், அடிக்கடி தேவையே இல்லாமல் முட்டிக்கொள்வார்கள். அன்றாடம், எல்லார் வீடுகளிலும் நடக்கிற சின்னச்சின்ன ஊடல்களை பூப்போன்று தொடுத்திருப்பார் பாக்யராஜ். . ’என்னய்யா இந்த ஆளு பாக்யராஜ்... நம்ம வூடுகள்ல நடக்கறதை அப்படியே காட்டிருக்கான்யா’ என்று பாக்யராஜைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள் ரசிகர்கள்.

சரிதா தனது விதவைத் தோழிக்கு வரவேண்டிய எல்.ஐ.சி. பணச்சலுகைக்காக கணவன் பாக்யராஜை உதவிக்கு அனுப்புவார். அந்த சந்திப்பில் இருவருமே சந்தர்ப்பவசத்தால், வசமிழக்கிறார்கள். ஆனால் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் புழுங்கித் தவிக்கிறார் பாக்யராஜ்.

ஒருகட்டத்தில் மனைவியிடம் விஷயத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்கிறார். அங்கே வெடிக்கிறது குடும்ப பூகம்பம். பாசம் வைத்தவர்கள், பாளம்பாளமாகப் பிரிகிறார்கள். அப்படிப் பிரிந்தவர்கள், அப்போதுதான் பஸ்சில் சந்தித்துக் கொள்கிறார்கள். இப்போது பிரிவு வளர்ந்தது போலவே, தம்பதிக்குப் பிறந்த பையனும் வளர்ந்திருக்கிறான்.

ஒரே அலுவலகம். வீடும் எதிரெதிராக. ஆனாலும் கணவனை மன்னிக்கத் தயாராக இல்லை சரிதா. இதனிடையே பையனுடன் ரகசிய சந்திப்பு நடத்துவார் அப்பா பாக்யராஜ். அப்பாவும் பையனும் ஒட்டிக்கொண்டு உறவாடுவார்கள். இதனால், பாக்யராஜும் சரிதாவும் இன்னும் முட்டிக்கொள்வார்கள். இதேநிலை நீடிக்க, மீண்டும் சேர்ந்தார்களா இல்லையா என்பதை அழகு ததும்ப, பாசம் பொங்க, உறவின் உன்னதம் உணர்த்தி, தாம்பத்ய மேன்மையை விவரித்து, தன் திரைக்கதை ஜாலத்தால் ஜெகஜ்ஜாலம் பண்ணி பிரமிக்க வைத்திருப்பார் பாக்யராஜ்.

ரகுநாதன், சுகுணா எனும் அவர்களின் கேரக்டர்களின் பெயர்களே மக்கள் மனங்களில் பதிந்துபோனது. பஸ் வழியில் நிற்கும். அங்கே பெண் மூலம் ஏற்படுகிற களேபரம்; அதில் மாட்டிக்கொண்டு முழிப்பார் பாக்யராஜ். அங்கிருந்து ஒரு பிளாஷ்பேக். ’மீனவ நண்பன்’ படத்தை பாக்யராஜும் சரிதாவும் தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்க, பாத்ரூம் சென்றுவிட்டு, இருட்டில் வேறு பெண்ணுக்கு அருகில் அமர்ந்துவிடுவார் பாக்யராஜ். தியேட்டரில் நடந்த அதகளத்தை பஸ் சம்பவத்துடன் இணைத்து நினைத்துப் பார்ப்பார் சரிதா! .

இன்னொரு காட்சி. இருவருக்கும் சின்ன சண்டை. மாடியில் தனியே படுத்துக்கொள்வார் பாக்யராஜ். அங்கே எதிர்வீட்டு மாடியில் ஒரு குழந்தை நின்றிருக்கும். அதற்கு பறக்கும் முத்தம் தருவார் பாக்யராஜ். ’புருஷன் யாருக்கு பறக்கும் முத்தம் தருகிறார்’ என்று வெளியே வந்து பார்பார் சரிதா. அங்கே குழந்தை இருந்த இடத்தில், பெண்மணி இருப்பார். அவ்வளவுதான். மீண்டும் களேபரம். அழுகை. ‘ஒரு சின்னத் தப்பு பண்ணினீங்கன்னாக் கூட நான் தாங்கமாட்டேன்’ என்று சொல்வார் சரிதா. அங்கே அவரின் பாத்திர வார்ப்பையும் நமக்குப் புரியவைத்துவிடுவார்.

வேலை விஷயமாக வெளியூர் செல்வார் பாக்யராஜ். அங்கே ஹோட்டலில் தங்கியிருக்கும் போது சின்ன சபலம் எட்டிப்பார்க்கும். சரி என்று சம்மதித்து, ‘ஸிலிப்பாகும் தருணத்தில்’ டிரங்கால் வரும் பாக்யராஜுக்கு. சரிதா போனில் அழைப்பார். பாக்யராஜ், ரிசப்ஷனுக்கு வந்து பேசுவார். அப்போது போலீஸ் ரெய்டு வரும். ’’நீங்க தப்பிச்சதே பெரிய விஷயம். எல்லாம் உங்க மாங்கல்ய பலம்தான் காரணம்’’ என்பார் ஹோட்டல்காரர். படம் பார்க்கிற ஆண்கள் ஜெர்க்காகி, சுதாரித்துக்கொள்கிற தருணம் அது!

மனைவிக்கு ’அந்த மூன்று நாட்கள்’ என்பதும் அப்போது கணவன் கோபப்படுவதும் திரைக்கு கொஞ்சம் புதுசுதான். ஆனால் மூன்றுநாளின் வேதனையை பொளேரென்று வசனங்களாலும் சரிதாவின் நடிப்பாலும் உணர்த்திவிடுவார் பாக்யராஜ். அதனால்தான் பாக்யாரஜை ஆண்களைவிட பெண்கள் இன்னும் இன்னுமாகக் கொண்டாடினார்கள். ’ஜாக்கெட் ஹூக்கை கொஞ்சம் மாட்டிவிடுங்க’ என்று சரிதா கெஞ்சுவார். ’ஆபீஸ் போற நேரத்துல..’’. என்று எரிந்துவிழுவார். ’‘ஒரு ஹூக்கை மாட்டுறதுக்கு எவ்ளோ நேரமாகும். கழட்டுறதுன்னா மட்டும் வேகமாக் கழட்டுறே’’ என்று திட்டுவார். கொஞ்சம் சரசம், கொஞ்சம் கேலி, கொஞ்சம் ஆண்களின் மனம், பெண்மையின் ஏக்கம் என சகலத்தையும் அந்தக் காட்சியில் விவரிக்கும் அழகு, காமெடிக் கவிதை!

ஆபீஸில் உடன் வேலை பார்க்கும் கிருஷ்ணமூர்த்தி, பஸ் ஸ்டாப்பில் சரிதாவிடம் ஒருமாதிரியாகப் பேசுவார். அவரை செருப்பால் அடித்துவிடுவார் சரிதா. பிறகு சரிதாவை ஒரு ஹோட்டலுக்கு வரவைத்து, ரூமில் நெருங்கக்கூட மாட்டார். ‘உன்னைத் தொடக்கூடமாட்டேன்’ என்று சொல்லும் கிருஷ்ணமூர்த்தி, தன் தலைமுடியை, சட்டையைக் கலைத்துக்கொள்வார். அப்படியே வெளியே சென்றால்... அலுவலக ஊழியர்கள். புதுவிதமாக, நாயகியைப் பழிவாங்கும் வில்லன் கதாபாத்திர குணமும் பகீர் கிளப்பும்.

அந்தக் குட்டிப் பையன் மாஸ்டர் சுரேஷ். பட்டையக் கிளப்பியிருப்பான். படு சுட்டி. பாக்யராஜ் போலவே பேசுவதும் இமிடேட் செய்வதும் என ரகளைபண்ணி கரவொலிகளை அள்ளிக்கொண்டே இருப்பான். ஒருகட்டத்தில், மகனிடம் ‘’விஷம் குடிச்சு செத்துடலாம்டா’’ என்பார் சரிதா. ’’நீ வேணா விஷம் குடிச்சிக்கோ. நான் எங்கப்பாவோட கொஞ்சகாலம் இருந்துட்டு, அப்புறமா செத்துப்போறேன்’’ என்பான். தியேட்டரே கைத்தட்டி ஆர்ப்பரிக்கும்.

சரிதாவுடன் வேலை பார்க்கும் பெண்மணி, தன் தங்கையையே கணவனுக்கு கட்டிவைத்து, மூவரும் ஒன்றாகவே வாழ்வார்கள். ’’வாழாவெட்டியா இருக்கறதைவிட, இது பெட்டர்’’ என்று அந்தத் தோழி சொல்லுவாள். அதேபோல், அலுவலகத்தில் வேலை பார்ப்பவரின் மனைவி இறந்துவிடுவார். ’’லச்சுமி. பத்துவருஷம் என்னை குழந்தை மாதிரி பாத்துக்கிட்டியே லச்சுமி. என்னை விடுங்கய்யா. நானும் இந்தத் தீயில விழுந்து செத்துடுறேன்’’ என்று கதறுவார். ஆனால் அவரே அடுத்த மாதம் இன்னொரு கல்யாணம் என்று வந்து நிற்பார்! ’’பொண்டாட்டி செத்த உடனே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிற இவரு எங்கே. விவாகரத்தே நடந்தாலும் நீதான் வேணும்னு உன்னையே சுத்தி வர்ற உன் புருஷன் எங்கே?’’ என்று சரிதாவிடம் கேட்பார் உடன் வேலை செய்யும் தோழி!

பொதுவாகவே, படத்தில் க்ளைமாக்ஸ் என்பது மிக மிக முக்கியம். அந்த க்ளைமாக்ஸில்தான் நல்ல நல்ல வசனங்களையெல்லாம் ஒவ்வொரு கேரக்டரையும் பேசவைத்து சுபம் போடுவார்கள். பாக்யராஜ் என்பவர் மிகச்சிறந்த ரைட்டர். அப்படியெனில், படத்தின் க்ளைமாக்ஸில் எப்படியெல்லாம் வசனம் எழுதியிருப்பார்? ஆனால், க்ளைமாக்ஸ்க்கான கால்மணி நேரமும் வசனங்களே இல்லாமல் நகரும். வசனங்களால் கைதட்டல்களைக் குவிக்கிற பாக்யராஜ், வசனமே இல்லாமல் இயக்கி கரவொலி வாங்கியிருப்பார். சரிதா எனும் நடிப்பு ராட்சஷிக்கு ஒவ்வொரு காட்சியும் செம தீனிதான். நடிப்பு வேட்டையாடியிருப்பார் சரிதா.

இதுகுறித்து, பாக்யராஜிடன் அவரின் நண்பர்கள், ‘’டயலாக்கே இல்லாம க்ளைமாக்ஸா?’’ என்று பயந்தார்களாம். ஆனால் பாக்யராஜ், தைரியமாக எடுத்தார். ஜெயித்தார்.

அதுமட்டுமா? கே.பாலசந்தரும் கூர்மையான வசனங்களால், பளார்பொளேரென அறைபவர்தான். ‘அவள் ஒரு தொடர்கதை’யின் கடைசி கால்மணி நேரக் காட்சிகள் வசனங்களே இல்லாமல்தான் இயக்கி ஜெயித்தார். இதையெல்லாம் தன் நண்பர்களிடம் சொல்லிப் புரியவைத்தார் பாக்யராஜ். ஒரு குடும்ப வாழ்க்கையை, இல்லறத்தின் மேன்மையை, அன்பின் அடர்த்தியை அழகிய டிராமாவாக்கி, அசத்தியிருந்தார் பாக்யராஜ். பல தியேட்டர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. வெள்ளிவிழா கொண்டாடியும் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது.

முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்துக்கு இசையமைத்த கங்கை அமரனே இந்தப் படத்துக்கும் இசை. ’மூக்குத்திப் பூமேலே’, ’மாசமோ மார்கழி மாசம்’, ‘டாடிடாடி ஓ மை டாடி’ என்று எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் இசையமைப்பாளர் கங்கை அமரன்!

பெண்களின் ’பல்ஸ்’ புரிந்து, உணர்ந்து, கதைப்படுத்துவதில் பாக்யராஜ் சூரர் எனப் பெயர்பெற்றது இந்தப் படத்திலிருந்துதான்! அநேகமாக, தமிழ் சினிமாவில், பார்த்த படத்தையே திரும்பத்திரும்பப் பார்க்கும் பெண்கள் இந்தப் படத்துக்கு சற்று அதிகமாகவே இருந்தார்கள். இவையெல்லாம்தான் பாக்யராஜ் எனும் கலைஞனின் மகா வெற்றி!

ஒவ்வொரு கணவனும் மனைவியும் பார்க்கவேண்டும். பார்த்தால், உண்மையாக வாழத் தொடங்கிவிடுவார்கள். இப்போதும் உண்மையாகத்தான் வாழ்கிறார்களென்றால், இன்னும் உண்மையாகவும், நேர்மையாகவும், அன்பாகவும் வாழ்வார்கள்!

1981ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி வெளியானது ‘மெளனகீதங்கள்’ திரைப்படம். படம் வெளியாகி, 42 ஆண்டுகளாகிவிட்டன. இந்தப் படத்தின் தாக்கத்திலிருந்து மீளமுடியாமல், பாக்யராஜின் தீவிர ரசிகர்களாகவே மாறிப்போன நாற்பது மற்றும் ஐம்பது ப்ளஸ் வயதினர் ஏராளம இருக்கிறார்கள்! அவர்கள் மட்டுமன்றி படம் பார்த்த எவராலும், சுகுணாவையும், ரகுவையும், ‘மெளனகீதங்கள்’ இசைத்த மூக்குத்திப்பூவையும் மறக்கவே முடியாது!

SCROLL FOR NEXT